விடிய விடிய கொட்டிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - கரூர் மாவட்டத்தில் விடுமுறை
மாலை முதல் அதிகாலை வரை விடாமல் கொட்டிய மழையால் நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அக்டோபர் 4ஆம் தேதிவரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. வானிலை மையம் அறிவித்தது போல நேற்று மாலை முதலே விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
30 நிமிடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணி மேற்கொண்டு வருவதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
அதேபோல ஆலங்குளம் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை மழை பெய்தது. ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி டி. கரிசல்குளம், டி.மேட்டூர், தொம்ப குளம், கொங்கன்குளம், மேலப்பழையாபுரம், கண்மாய் பட்டி, வலையபட்டி,மேலாண்மறைநாடு அப்பயநாயக்கர்பட்டி, கோவில் செந்தட்டியாபுரம், அருணாசலபுரம், சீவலப்பேரி, கீழாண்மறைநாடு, குறுஞ்செவல், புளியடிபட்டி, சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கோபாலபுரம், ஆகிய கிராமங்களில் மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதியில் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை கனமழை பெய்தது. ஒரே இரவில் கிட்டத்தட்ட 10 செமீக்கு மேல் மழை பெய்ததால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாத சூழ்நிலையில் வீடுகளுக்குள் புகுந்தது.
பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளி, சூரியன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிக அளவு மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த பகுதியை சேர்ந்த நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மேடான பகுதிகளில் தங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனிடையே உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், இதுதவிர தொடர்ந்து 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்பதாலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று, நாளை நாளை மறுதினம் மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு நாளை முதல் 4 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications