நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை
நாமக்கல்; நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.30 கோடி சிக்கியுள்ளது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளி நிர்வாம் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி மையங்களை நாமக்கல், கரூர், சென்னை ஆகிய இடங்களில் நடத்தி வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் தான் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகள், அரசு அதிகாரிகளின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழில்அதிபர்களின் பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.

வருமான வரித்துறை
நாமக்கல் தனியார் பள்ளி நடத்தி வரும் ‘நீட்' தேர்வுக்கான பயிற்சி மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும் அந்த பள்ளியை பற்றி ஒரு ரகசிய தகவல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் கிடைத்தது.

17 இடங்களில் சோதனை
இதையடுத்து அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நாமக்கல்லில் உள்ள பள்ளி அலுவலகம், நாமக்கல், கரூர், சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் ‘நீட்' பயிற்சி மையம் உள்ளிட்ட 17 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

பணம் சிக்கியது
வியாழக்கிழமை காலை தொடங்கிய இந்த சோதனை வெள்ளிக்கிழமையான நேற்றும் நீடித்தது. கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் பள்ளியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.30 கோடி கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளார்கள்.

வரி ஏய்ப்பு
மேலும் இந்த சோதனையில் 150 கோடி ரூபாய் அளவுக்கு அந்த பள்ளி நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில்தான் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் ஆய்வு
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையின் பள்ளி கணக்குகள் பராமரிக்கப்படும் வங்கிகளுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தார்கள். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.












Click it and Unblock the Notifications