வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நாமக்கல், திருப்பூர், ஈரோடு முட்டைகள்.. தினமும் விலை உயர்வதன் பின்னணி
நாமக்கல்: தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி என்பது நாமக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. இந்த மாவட்டங்களில் உற்பத்தியாகும் முட்டைகள் தற்போது பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உலக நாடுகளில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வரலாறு காணாத அளவிற்கு முட்டை விலை உயர்ந்துள்ளது. முட்டை விலை 7 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. முட்டை விலை தினமும் 5 காசுகள் அதிகரித்து வருகிறது.
புரதம் அதிகம் நிறைந்த உணவாக முட்டை இருக்கிறது. முட்டையை ஆம்லெட், அவித்த முட்டை, ஆப்பாயில் என விதவிதமான உணவு வகைகளாக தயார் செய்துமக்கள் தினமும் சாப்பிடுவது வழக்கம். சிலருக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் போது கட்டாயம் முட்டை இருக்க வேண்டும். புரதம், வைட்டமின்கள் நிறைந்த உணவான முட்டையை பலர் கட்டாயம் உணவில் சேர்ப்பார்கள்.

அந்த வகையில் குழந்தைகளுக்கான உணவில் முட்டை இடம் பெறுகிறது. தற்போது முட்டையின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சில்லரை விலையில் தற்போது கடைகளில் முட்டை ஒன்று ரூ.7-க்கு மேல் விற்பனையாகிறது. முட்டை விலை கடந்த அக்டோபர் வரை வெறும் 5 ரூபாய் என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகைக்கு பின்பு விலை கிடுகிடுவென உயர்ந்தது. ரூ.5.50, ரூ.6 என வேகமாக உயர்ந்த முட்டை தற்போது ஏழு ரூபாயை தாண்டி உள்ளது. வருகிற நாட்களில் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக முட்டையை மொத்தமாக வாங்கி விற்கும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
முட்டை மொத்த வியாபாரிகள் இதுபற்றி கூறும் போது, தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்துதான் அதிக அளவில் முட்டை விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக நாமக்கல் பகுதியில் தான் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. முட்டை விலை நாமக்கல் பகுதியில் தான் தினமும் நிர்ணயம் செய்யப்டகிறது. தீபாவளிக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி காரணமாக விலை உயர்ந்து வருகிறது.
தற்பேது பெருந்துறை, பல்லடம் பகுதியில் இருந்துகூட முட்டைகள் கிடைப்பதில்லை. நாளொன்றுக்கு 5 காசுகள் வீதம் முட்டை விலை உயர்ந்து வருகிறது. மொத்த விலைக்கே முட்டை ரூ.5.50-க்கு கிடைத்த நிலையில், தற்போது ரூ.6.05-க்கு தருகிறார்கள். ஒரு முட்டைக்கு போக்குவரத்து செலவாக 10 காசுகள் ஆகிறது. நாங்கள் மொத்த விலையில் கடைக்காரர்களுக்கு ரூ.6.40 முதல் ரூ.6.50 வரை விற்பனை செய்கிறோம். அவர்கள் ரூ.7-க்கு விற்பனை செய்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, கனடா, பிரேசில், நார்வே நாடுகளுக்கு முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு தேவை அதிகம் ஏற்பட்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இதன் காரணமாக இந்தியா முழுவதுமே முட்டை வேகமாக உயர்ந்து வருகிறது.
பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் அய்யப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அப்போது இறைச்சி சேர்க்க மாட்டார்கள். முட்டைசேர்க்க மாட்டார்கள்.அதனால் முட்டைவிலை குறைந்தே காணப்படும்.ஆனால் இந்த முறைதேவை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதியாவதுபோன்ற காரணங்களால் முட்டை விலை சில காலத்திற்கு குறைய வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications