நாமக்கல் திமுக... முன்னாள் மத்திய அமைச்சர் போடும் முட்டுக்கட்டை.. முட்டி மோதும் மாவட்டச் செயலாளர்.!
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட திமுக வளர்ச்சிக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் உபகாரம் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்ற வேதனை குரல்கள் எழுந்துள்ளன.
கொரோனா நிவாரண உதவி என்ற பெயரில் விளம்பரத்திற்கும், ஒப்புக்கும் காந்திச்செல்வன் நடத்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் தேவையின்றி கட்சிக்கு விமர்சனத்தை பெற்றுத்தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் காந்திச்செல்வனுக்கு இருந்த ஆதரவாளர்கள் வட்டம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகள்
நாமக்கல் மாவட்ட திமுகவில் சுமார் 20 ஆண்டுகளாக கட்சியில் அதிகாரம் மிக்க பதவியை சுவைத்து வந்தவர் காந்திச்செல்வன். ஒன்றியத்தில் தொடங்கி மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வரை அனைத்துப் பதவிகளையும் திமுக மூலம் அனுபவித்தவர். கருணாநிதி மூலம் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகளை பெற்ற இவர், கடந்த மாதம் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சிக்கு கூட அஞ்சலி செலுத்த கட்சி அலுவலகத்திற்கு வராதது திமுகவினரின் புருவத்தை உயர்த்த வைத்தது.

சமூக வலைதளம்
வரும் சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட விரும்பும் காந்திச்செல்வன் அதற்காக காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடத்திய கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும் வைரலானது. முடிவெட்டுவதற்கு கூட இந்தக் காலத்தில் 200 ரூபாய் செலவாகும் நிலையில் 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை கொடுத்துவிட்டு காந்திச்செல்வன் விளம்பரம் தேடுவதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ திமுகவை விமர்சனத்திற்குள்ளாக்கியது.

அதிமுகவுடன் நெருக்கம்
தன்னிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு இளைஞரணி அமைப்பாளராக இருந்த ராஜேஷ்குமார் வசம் வழங்கப்பட்டதை காந்திச்செல்வன் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே இது குறித்த தனது அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்தாமல் திரைமறைவு அரசியல் செய்து வருவதாக காந்திச்செல்வன் மீது புகார் தெரிவிக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் காந்திச்செல்வன் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுடன் நெருக்கம் பாராட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

வழிகாட்டி
இளைஞர்களை அரவணைத்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய காந்திச்செல்வன் பதவி அரசியல் செய்வது கட்சிக்கு நல்லதல்ல என்றும் நாமக்கல் திமுகவின் அடையாளமாக திகழ்ந்த கே.கே.வீரப்பன் இவரை போல் அன்று நினைத்திருந்தால் காந்திச்செல்வனால் இன்று இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது எனவும் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். இதனிடையே திமுக இளைஞரணியில் இருந்து மாவட்டச் செயலாளராக புரோமோஷன் பெற்றவர்களுக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கட்சிப்பணிகளில் முட்டுக்கட்டை போடுபவர்கள் பட்டியல் ஒன்று தமிழக அளவில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications