ஓரங்கட்டிய மாஜி.. திமுகவில் சேர்வதை தடுத்த எம்.பி.. ‘சம்பவம்’.. சபதம் எடுத்த முன்னாள் எம்.எல்.ஏ!
நாமக்கல் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன் சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணியால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர், தங்கமணிக்கு எதிராக தற்போது அதிரடி காட்டி வருகிறார். திமுக மா.செ, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆகியோர் மீதான கோபத்தில் சபதமே எடுத்திருக்கிறாராம்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன், சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவரோடு ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் என முக்கிய நிர்வாகிகள் பலரையும் அழைத்து வந்திருப்பதால், ஈபிஎஸ் அணியின் தங்கமணி தரப்புக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரு வருடமாக கட்சியில் இல்லாவிட்டாலும், கொல்லிமலை அதிமுகவையே குடைந்து ஓபிஎஸ் வசம் ஒப்படைத்திருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரட்டுவேன் என சபதம் எடுத்திருக்கிறார் சந்திரசேகரன். சந்திரசேகரின் திட்டத்தை தடுப்பதற்காக ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணி, மாவட்டம் முழுவதும் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தங்கமணி உரசல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் 2016 முதல் 2021 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சந்திரசேகரன். கொல்லிமலை ஒன்றிய அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். அமைச்சர் தங்கமணிக்கும் இவருக்கும் நீண்ட காலமாகவே உரசல் இருந்து வந்தது, மீண்டும் சீட் கொடுத்து வெற்றி பெற்றால் தன்னை மீறிச் சென்றுவிடுவார் என தங்கமணி கருதியதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எதிர்த்தேன்.. கட்டம் கட்டிட்டாங்க
அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட்டார். தங்கமணி ஆதரவாளரான சந்திரனை எதிர்த்து தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்தினார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், தனது ஆதரவாளர்களைத் திரட்டி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார். தொகுதிக்கு நல்லது செய்ய நினைத்தேன், அமைச்சர் தங்கமணி தடுக்க நினைத்தார், எதிர்த்துக் கேட்டதால் கட்டம் கட்டி விட்டார்கள் என உருக்கமாகப் பேசி ஓட்டுக் கேட்டார் சந்திரசேகரன்.

தோல்விக்கு காரணமான சந்திரசேகர்
அந்த தேர்தலில் தங்கமணி ஆதரவாளரான சந்திரன் தோல்வியடைந்து, திமுக வேட்பாளர் பொன்னுச்சாமி வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள். ஆனால், சுயேட்சையாக நின்று சந்திரசேகரன் பெற்ற வாக்குகள் 11 ஆயிரத்துச் சொச்சம். சந்திரசேகரன் நின்றதே அதிமுக வேட்பாளரின் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

தங்கமணியை பழிவாங்கி
அதேநேரம், தனக்கு சீட் தர மறுத்த தங்கமணியை பழிவாங்கி விட்டதாக கொண்டாடினார் சந்திரசேகரன் தரப்பினர். தேர்தலுக்குப் பிறகு சந்திரசேகரன் வேறு எந்த கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார். ஆளுங்கட்சியான திமுக அதிருப்தியில் இருந்த பலரையும் தங்கள் பக்கம் இழுத்த நிலையிலும், சந்திரசேகரனை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சிக்கவில்லை.

திமுகவுக்கு வேண்டாம்
அதற்கும் ஒரு காரணம் உண்டு. சந்திரசேகரன் முதலில் திமுகவில் இருந்தவர் தானாம். திமுகவில் நாமக்கல் மாவட்ட துணை செயலாளராக இருந்த சந்திரசேகரன், 1996 - 2001 பீரியடில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். பின்னர் 2001ல் கொல்லிமலை ஒன்றிய சேர்மனாக பதவி வகித்திருக்கிறார். 2006ல் கட்சி இவருக்கு சேர்மன் பதவி தராததால் சுயேட்சையாக நின்று சேர்மன் ஆகியுள்ளார். அதன்பிறகே அதிமுகவில் இணைந்துள்ளார்.

தடுத்த மா.செ
2011லும் கொல்லிமலை சேர்மனாக அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார் சந்திரசேகர். 2016ல் எம்.எல்.ஏ சீட் கிடைத்து 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். 2021ல் சீட் வழங்கப்படாத நிலையில் திமுக பக்கம் சேர் முயற்சித்துள்ளார். தங்கமணிக்கு குடைச்சல் கொடுப்பேன் என திமுக தரப்பில் பேசியும் பார்த்துள்ளார். ஆனால், நாமக்கல் கிழக்கு மா.செ கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சந்திரசேகரன் திமுகவுக்குள் வர விரும்பாமல், அவரது பின்னணி பற்றிச் சொல்லி தடுத்ததாக கூறப்படுகிறது.

3 முறை சேர்மன், 2 முறை எம்.எல்.ஏ
இந்நிலையில் தான், நேரம் பார்த்துக் காத்திருந்த சந்திரசேகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து தங்கமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். 3 முறை கொல்லிமலை ஒன்றிய சேர்மன், 2 முறை சேந்தமங்கலம் எம்.எல்.ஏ என அரசியல் பழக்கத்தின் மூலம் ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள் என 200 பேரோடு ஓபிஎஸ் அணிக்குப் பாய்ந்திருக்கிறார். இதனால் கொல்லிமலை அதிமுகவே கிட்டத்தட்ட ஓபிஎஸ் கோட்டையாகியுள்ளது.

சபதம் - வெலவெலத்துப் போன தங்கமணி
சந்திரசேகரனின் குணம் அறிந்த தங்கமணி இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ என வெலவெலத்துப் போயிருக்கிறாராம். இதுபோதாதென்று, சமீபத்தில் ஓபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரக்கூடாது என தெளிவாக செயல்பட்டவர் தங்கமணி என விளாசியிருக்கிறார். மேலும், தனது ஏரியாவில் இருந்து 10 ஆயிரம் பேரை ஓபிஎஸ் அணிக்குத் திரட்டுவேன் என்றும் சபதம் எடுத்துள்ளார். இதனால், தங்கமணி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications