கரூர் துயரத்திற்கு பிறகு கடும் கட்டுப்பாடுகள்.. நாமக்கல்லில் இன்று பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி
நாமக்கல்: கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் இதுபோன்று அசம்பாவித சம்பவம் அரங்கேறி விட கூடாது என்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், எதிக்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுக்க சட்டசபை தொகுதி வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

திருச்செங்கோடு, குமாரபாளையம்
அந்த வகையில் கடந்த கடந்த மாதம் 19 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிகளிலும், 21 ஆம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இங்கு பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அவரது பரப்புரை பயணம் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தேதிக்கு பதிலாக அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அங்கு பிரசாரம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
பிரசாரம் ஒத்திவைப்பு
ஆனால் அதற்குள் கரூர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதால் பிரசார கூட்டங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை ஏற்படுத்தும் வரை தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பிரசார கூட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நாமக்கல் போலீசார் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களை தேர்வு செய்து அனுமதி கோருமாறு அதிமுகவினருக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இன்று திருச்செங்கோடு, குமாரபாளையும் தொகுதியிலும் நாளை நாமக்கல், பரமத்திவேலூர் தொகுதியிலும் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது.
இன்று மாலை பிரசாரம் செய்கிறார்
போலீசார் அறிவுறுத்தல்படி அதிமுகவினர் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து சில நிபந்தனைகளுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி இன்று எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி அளவில் திருச்செங்கோடு கரட்டுபாளையம் பகுதியிலும், 6.30 மணி அளவில் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியிலும் பிரசாரம் செய்வார்.
நாளை மாலை 5 மணி அளவில் நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியிலும், 6.30 மணி அளவில் பாண்டமங்கலம் பகுதியிலும் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரசாரம் செய்வார் என கூறப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications