சல்லி சல்லியாக நொறுங்கிய விஜய்யின் கூட்டணி திட்டம் - தன்னந்தனியாக பிரச்சாரத்தை தொடங்கிய தவெக
நாமக்கல்: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த தவெக இப்போது பொட்டி பாம்பாய் அடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தங்கள் கூட்டணியில் யாரும் இணையாததால் தவெக விசில் சின்னத்துடன் அந்தக் கட்சியின் சீனியர் நிர்வாகி அருண்ராஜ் உள்ளிட்டோர் தன்னந்தனியாக பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது. தவெக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் முதல் மாநாட்டிலேயே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தனர்.

தவெக கூட்டணி புறக்கணிப்பு
ஆனால் 2 வருடங்கள் நிறைவடைந்தும் விஜய்யின் கருத்து பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதிமுக, விசிக, காங்கிரஸ் என்று தவெகவுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது. விசிக, காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பே இல்லை என தெரிகிறது.
விஜய்யை வெளிப்படையாக ஆதரித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ், தேமுதிக ஆகியோரும் தவெகவில் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசியலில் தவெக தனித்து விடப்பட்டுள்ளதாக திமுக, பாஜக விமர்சிக்கின்றன.
தனியாக பிரச்சாரம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் வெளியீட்டில் தடை ஆகியவற்றால் விஜய் நெருக்கடியில் உள்ளார். பாஜகவை நேரடியாக எதிர்க்காமலும், பொது வெளியில் வராமல் அமைதியாகிவிட்டார். இந்நிலையில் தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் மக்களுக்கு விசில் சின்னத்தை வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
கூட்டணியில் யாரும் இணைய மாட்டார்கள் என்பதால் தவெக வேறு வழியில்லாமல் பிரச்சாரத்தை தொடங்கியதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து அருண்ராஜ் செய்தியாளர்களிடம், "திருமணமான தம்பதி கூட மணமேடையில் விசில் அடித்து கொண்டாடும் மன நிலையில் உள்ளனர். அந்தளவுக்கு எங்கள் தலைவரிடம் மக்களுக்கு ஆதரவு உள்ளது. நாங்கள் செல்லும் இடமெல்லாம் எப்போது பொது சின்னம் கிடைக்கும் என்பதைத்தான் மக்கள் கேட்டார்கள்.
மக்களுடன் கூட்டணி
எங்கள் கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திருச்செங்கோடு நகரம், ஒன்றியங்கள் முழுவதும் எங்கள் விசில் சின்னத்தை அன்பாக கொடுத்து, மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்கள். எங்கள் கட்சியினர் முழு உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறார்கள். மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு திட்டமிட்டுள்ளோம். கியூ ஆர் கோட் அடிப்படையில் திருச்செங்கோடு முழுவதும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவோம்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள், "மற்ற கட்சிகளில் கூட்டணியை இறுதி செய்துவிட்டனர். கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்துவிட்டனர். இனி தவெகவில் இணைவதற்கு யாரும் இல்லை. ஓபிஎஸ், தேமுதிக மட்டும் தான் உள்ளனர். அவர்களாவது உங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா" என கேள்வி எழுப்பினர். அதற்கு அருண்ராஜ், "எங்கள் தலைவர் தவெக மக்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளார். நாங்கள் எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications