மின்வெட்டுக்கு என்ன காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கமணி பதிலடி
நாமக்கல்: தமிழகத்தில் மின்தடையை சரிசெய்யாமல் ஏற்கனவே இருந்த அதிமுக அரசுதான் மின்தடைக்கு காரணம் என்று தவறான தகவலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தருவதாக முன்னாள் அமைச்சர், பி.தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 17ம் தேதி பேட்டி அளித்தார்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது, கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது மின் தடை ஏற்படுவதாகவும் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
கடன் அதிகம்
மேலும் மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம் என்று விளக்கம் அளித்தார்.
மின்தடை இல்லை
இதற்கு நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பதிலடி கொடுத்து பேசுகையில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தது. இந்தக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினோம் மத்திய அரசின் அறிவிப்பிலும் இது இடம் பெற்று உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படாத வகையில் பராமரிப்புப் பணிகளை எங்கள் ஆட்சி காலத்தில் மேற்கொண்டோம்.
சரிசெய்தோம்
கஜா, உள்பட பல்வேறு புயல்கள் தமிழகத்தைத் தாக்கியபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விரைவாக மின்விநியோகத்தைச் சீரமைத்துக் கொடுத்தது. கஜா புயலின்போது 3 லட்சத்து 31 ஆயிரம் மின் கம்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான டிரான்ஸ்பார்மர்கள் உடைந்து விழுந்தன. இதனால், 8 மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வேகமாகச் செயல்பட்டு, உடனடியாக அங்கு மின்கம்பங்கள் மாற்றப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டது .
காற்றாலை மின்சாரம்
தமிழகத்தில் மே மாதம் 2-ம் தேதி வரை மின்சார விநியோகம் சீராக நடைபெற்று வந்தது. அப்போது தமிழகத்தின் உச்சபட்ச மின்சாரத் தேவை 17,121 மெகா வாட்டாக இருந்தது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 3,300 மெகா வாட் பெறப்பட்டது போக, மீதி மின்சாரத்தைத் தமிழகத்திலேயே உற்பத்தி செய்தோம். தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மின்சாரத் தேவை குறைந்துள்ளது. தற்போது சுமார் 14 ஆயிரத்து 500 மெகா வாட் மட்டுமே மின்தேவையாகும்..
இதுதவிர தமிழகத்தில் காற்றாலை மூலம் 3 முதல் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. தமிழகத்தில் தற்போது 31 ஆயிரம் மெகா வாட் தயாரிக்கும் அளவுக்கு மின்திறன் உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான தகவல்
திமுக அரசு பதவியேற்று பத்து நாட்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைப்போம் என்று கூறினார்கள். தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மே 7ம் தேதியில் இருந்து என்ன செய்து கொண்டிருக்கிறார். மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் தற்போது தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சென்னையில் புதைவடம் மூலம் மின்விநியோகம் செய்யப்படும் நிலையில் மின்தடை ஏற்பட காரணம் என்ன? மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்கவில்லை. அதனால் தான் மின் தடை ஏற்படுகிறது. அவர் தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அதிமுக அரசு சரியாகப் பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்று காரணம் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.
மே மாத கட்டணம்
கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தியபோது மின்சாரக் கட்டணம் கணக்கெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டிய கட்டணத்தைப் பொதுமக்கள் செலுத்தலாம் என்று அறிவித்தோம். ஆனால் டந்த ஆண்டு மே மாதம் எடுத்த கணக்கின்படி மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தக் கோருகிறார்கள். மே மாதம் கோடைக் காலம் என்பதால் பலருக்கும் அதிகப்படியான மின்சாரக் கட்டணம் வந்துள்ளது. அந்தத் தொகையை தற்போது செலுத்தச் சொல்வதால், கூடுதலான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்' இவ்வாறு தங்கமணி பேட்டியின் போது கூறினார்.