அடர்ந்த காட்டில்.. 10 வாரமாக உரிமையாளரின் உடலை பத்திரமாக பாதுகாத்த வளர்ப்பு நாய்! நெகிழ்ச்சி சம்பவம்
நியூயார்க்: அமெரிக்காவில் மலை ஏறும் முயற்சியில் உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை 10 வாரமாக பத்திரமாக வளர்ப்பு நாய் ஒன்று பாதுகாத்திருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்காவின் மிகப்பெரிய மலைதான் கொலராடோ மலைத்தொடர். இது சுமார் 12,389 அடி உயரம் இருக்கும். இந்த மலை மீது ஏறி உச்சியை அடைந்தால் அங்கிருந்து பார்க்க அமெரிக்காவின் நிலப்பரப்பு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். அன்றாடம் வேலை, அலுவலகம் என பிஸியாக இருக்கும் அமெரிக்க மக்கள் இதுபோன்ற மலைகளை சுற்றி பார்ப்பதை அதிகம் விரும்புவார்கள். அப்படித்தான் ரிச் மூர் எனும் 71 வயது முதியவர் தனது ஃபின்னி எனப்படும் வளர்ப்பு நாயுடன் கொலராடோ மலையை ஏறியுள்ளார்.

இந்த பயணம் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று தொடங்கியுள்ளது. மலை ஏறியவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. இவரை தேடி சென்ற மீட்பு படையினரால் இவரது காரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இப்படியே மெல்ல நாட்கள் நகர்ந்தன. பின்னர் 10 வாரங்கள் கழித்து ஒரு வழியாக அக்டோபர் மாதம் 30ம் தேதியன்று மூர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
மலை ஏறும்போது இவருடன் பயணித்த நாய் 10 வாரங்கள் கழித்தும் உயிருடன் இருந்திருக்கிறது. தனது உரிமையாளரின் உடலை மலை சிங்கங்கள், கரடி, நரி போன்றவற்றிடமிருந்து பாதுகாத்து வைத்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "எங்களுக்கு ஆகஸ்ட் 20ம் தேதியன்று மூர் காணவில்லை என்று புகார் வந்தது. வழக்கமாக இப்படி மலை ஏறுபவர்கள் வழிதவறி சென்றுவிடுவது இயல்புதான். எனவே நாங்கள் மீட்பு படையினருடன் தேடுதலில் இறங்கினோம்.
எங்களால் மூர் பயன்படுத்திய காரை மட்டுமே கடைசியாக பார்க்க முடிந்தது. பின்னர் நாங்கள் தேடுதல் வேட்டை கைவிட்டுவிட்டோம். எப்படி இருந்தாலும் மூர் நிச்சயமாக உயிரிழந்திருப்பார். அவரது சடலமும் காட்டு விலங்குகள் ஏதேனும் எடுத்து சென்றிருக்கலாம். எனவே நாங்கள் வேட்டையாடுபவர்களிடமும் தகவல் சொல்லியிருந்தோம்.
இதனையடுத்து கடந்த 30ம் தேதி எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதாவது அடையாளம் தெரியாத சடலம் ஒன்று பள்ளத்தாக்கில் இருப்பதாகவும், அருகில் வளர்ப்பு நாய் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. உடனடியாக நாங்கள் மீட்பு படையை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு மூர் சடலமாக இருந்தார். அவரது நாய் சடலத்தை சுற்றி சுற்றி வந்து குரைத்துக்கொண்டே இருந்தது.
எங்களால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கடும் குளிரை தாங்காமல் இந்த நாய் எப்போதோ இறந்திருக்க வேண்டும். ஒருவேளை குளிரிலிருந்து தப்பித்தாலும் மலை சிங்கம், கரடி, ஓநாய் போன்ற வேட்டை விலங்குகளால் இது தாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது அதிசயமாக உயிர் பிழைத்திருக்கிறது. அவ்வப்போது கிடைத்த எலி போன்ற சிறு உயிர்களை இது வேட்டையாடி இருக்கிறது. தற்போது இந்த நாயை நாங்கள் மூர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
ஒரு நாய், மிகவும் அசாதாரண சூழ்நிலையில் தான் உயிரோடு இருந்த தனது எஜமானரின் உடலையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications