இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்.. தமிழக வம்சாவளி மாணவி உட்பட ஏராளமானோர் கைது
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டம் தீ பிடித்திருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழக வம்சாவளியை சேர்ந்த மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்த போராட்டம்
நியூயார்க் பல்கலைக்கழகம்,
மினசோட்டா பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
ஓஹியோ மாநில பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்-பெர்க்லி
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
டெக்சாஸ்-ஆஸ்டின் பல்கலைக்கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
எமர்சன் கல்லூரி
எம்ஐடி
டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
தி நியூ ஸ்கூல்
லாஸ் ஏஞ்சல்
என 15 பல்கலைக்கழகத்திற்கு பரவியுள்ளது. இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அமெரிக்கா அரசு காவல் துறைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் கொலம்பியா பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று வெவ்வேறு பல்கலையில் 60 மாணவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
அதிகபட்சமாக ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் 28 மாணவர்கள், இந்தியானா பல்கலைக்கழகத்தில் 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும், இஸ்ரேல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதலீடுகளை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டங்களை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம் கண்டித்திருக்கிறார். இது வெறுப்பை விதைக்கும் போராட்டம் என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
அதேபோல பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றதற்காக தமிழக வம்சாவளியை சேர்ந்த மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த அச்சிந்தியா சிவலிங்கம் ஓஹோவின் கொலம்பஸில் வளர்ந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications