அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டது ஏன்? கலங்கும் பெண்கள்! கொண்டாடிய டிரம்ப்! விளாசிய பிடன்
நியூயார்க்: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பான்மையான மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில் அலபாமாவில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. அங்கு கருக்கலைப்பிற்கு நீண்ட ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் விஸ்கான்சின், வெஸ்ட் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் நேற்று இரவில் இருந்தே கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுவிட்டது.
ஏன் இந்த தடை.. கருக்கலைப்பு ஆசிய நாடுகளில் கூட சகஜமாக இருக்கும் நிலையில் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாட்டில் எப்படி தடை விதிக்கப்பட்டது என்ற கேள்வி எழுவது சகஜம்தான். இதை புரிந்து கொள்ள, முதலில் இந்த வழக்கை புரிந்து கொள்ள வேண்டும்.
இனி அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமானது இல்லை.. 50 ஆண்டு நடைமுறையை மாற்றிய உச்சநீதிமன்றம்
நீக்கப்பட்ட உரிமை
கருக்கலைப்பை அங்கு உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது என்று கூறுவதை விட.. கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கிய சட்டத்தைதான் தடை செய்துள்ளது. அதாவது நாடு முழுக்க 50 மாகாணங்களிலும் கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் 1972ல் போட்ட உத்தரவை 50 ஆண்டுகள் கழித்து அதே உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள மாகாணங்கள் மீண்டும் கருக்கலைப்பு சட்டங்களை கொண்டு வர முடியும்.
கருக்கலைப்பு தடை
50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் இந்த சட்டத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கருக்கலைப்பை பெரும்பாலான மாகாணங்கள் அங்கு தடை செய்ய வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக வலதுசாரி கொள்கை கொண்ட மாகாணங்கள், குடியரசு கட்சி கவர்னர் உள்ள மாகாணங்களில் இந்த தடை அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக குடியரசு கட்சி சார்பாக அலபாமாவில் கேய் லெவி என்பவர் கவர்னராக இருக்கிறார். இவர் அங்கு நேற்று இரவு கருக்கலைப்பை தடை செய்தார்.
கருக்கலைப்பை தடை செய்தார்
மீறி கருக்கலைப்பு செய்தால் அது மிகப்பெரிய குற்றம். அதாவது வன்புணர்விற்கு இணையான ஆயுள் தண்டனை இதற்கு வழங்கப்படும். அதே சமயம் ஜனநாயக கட்சி ஆளும் கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் கருக்கலைப்பிற்கு அனுமதி, பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. கருக்கலைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்ற வழங்கிய இந்த தீர்ப்பு அமெரிக்காவை உலுக்கி உள்ளது;. 1969ல் போடப்பட்ட வழக்கு ஒன்றிற்கு எதிரான மேல்முறையீடு ஆகும் இது.
என்ன வழக்கு
1969ல் டெக்சாஸில் நோர்மா என்ற பெண் கருத்தரித்தார். மூன்றாவது முறை கருத்தரித்த இவர் அதை கலைக்க முடிவு செய்தார். ஆனால் டெக்ஸாஸ் சட்ட விதிப்படி கருக்கலைப்பு தவறானது. அதே சமயம் இது தனது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கருதிய அவர் வழக்கு தொடுத்தார். சட்ட ரீதியாக, ரோ என்ற புனை பெயரில் டெக்ஸாஸ் மாகாண அட்டர்னி ஜெனரலுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். அட்டர்னி ஜெனரல் பெயர் வேட். இதுதான் பிரபல ரோ vs வேட் கேஸ் ஆகும்.
கருக்கலைப்பிற்கு அனுமதி
இந்த வழக்கில் மாகாண நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1972ல் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேரில் 7 பேர் கருக்கலைப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். 50 ஆண்டுகள் இந்த சட்டத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த நான்கு ஆண்டுகளில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன.
டிரம்ப்
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூட இந்த வாக்குறுதியை கொடுத்தார். கண்டிப்பாக கருக்கலைப்பிற்கு எதிராக தடை கொண்டு வருவேன் என்று கூறினார். கருக்கலைப்பு என்பது கிறிஸ்துவ மதத்திற்கு எதிரானது. உயிரை கொல்ல நமக்கு உரிமை கிடையாது என்பதே அங்கு இருக்கும் டிரம்பின் ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு கட்சியின் வைக்கும் வாதம் ஆகும். அப்போதே உச்ச நீதிமன்றத்தில் கருக்கலைப்பு அனுமதி சட்டத்திற்கு எதிரான மேல்முறையீடு செய்யப்பட்டது.. கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது.
அமெரிக்கா கருக்கலைப்பு தடை
இந்த வழக்கில் நேற்று இரவு வழங்கப்பட்ட தீர்ப்பில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. 9 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் கருக்கலைப்பை தடை செய்துள்ளனர். அதில் 3 நீதிபதிகள் டிரம்பிற்கு நெருக்கமானவர்கள். டிரம்ப் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களின் நியமனத்தின் போதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போதே கருக்கலைப்பிற்கு தடை வரலாம் என்று கூறப்பட்டது.
தடை வரலாம்
அதன்படியே தற்போது அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டிரம்ப் இந்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய தீர்ப்பு. வாழ்க்கைக்கான வெற்றி இது. சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. இது கடவுள் கொடுத்த தீர்ப்பு. கடவுளின் விருப்பம். நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். இந்த தீர்ப்பிற்காக நான் பெருமைப்படுகிறேன், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் போராட்டம்
அமெரிக்காவில் பெண்கள் பலர் பல மாகாணங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். எங்களின் தனிப்பட்ட உரிமையில் இவர்கள் தலையிட கூடாது என்று கூறி போராடி வருகிறார்கள். பெண்களின் போராட்டத்திற்கு இடையில் அமெரிக்க அதிபர் பிடன் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்துள்ளார். மக்களின் உரிமையை பறிக்கும் தீர்ப்பு இது. அமெரிக்கர்களின் தனிப்பட்ட உரிமையை இது பறிக்கிறது. பெண்களின் ஆரோக்கியத்தையும், தனிப்பட்ட தேர்வையும் பாதிக்கும் தீர்ப்பு இது. இதற்கு எதிராக அரசு போராடும் என்று அறிவித்து இருக்கிறார்.