பிரபல அமெரிக்க டைரக்டர் கொலை வழக்கு.. 34 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி இயக்குனரை கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் கொலை குற்றவாளி ஒருவர், 34 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் இயக்குனராக வேலை பார்த்தவர் பெரி கிரானே. 'டல்லாஸ்’, 'மிஷன் இம்பாசிபல்’, ஹவாய் ஃபைவ் ஒ’ உள்ளிட்ட பிரபலமான நிகழ்ச்சிகளை இயக்கியவர் இவர்.

34 ஆண்டுகளுக்கு முன்னர் பெரி கிரானே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், பெரியை யாரோ கடுமையாக தாக்கி கொன்றது தெரியவந்தது.
இத்தனை ஆண்டுகளாக பெரியை கொன்றது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை கையில் எடுத்த புதிய போலீஸ் அதிகாரி ஒருவர், பெரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மறுஆய்வு செய்தார்.
அப்போது பெரியை கொன்றவர் பற்றிய துப்பு கிடைத்தது. இதையடுத்து, தீவிர புலனாய்வுக்கு பிறகு, பெரியை கொன்றது வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த எட்வர்ட் கியாத் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியுடன் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட எட்வர்ட் கியாத்துக்கு தற்போது 52 வயது ஆகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கியாத்தை சிறையில் அடைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கியாத்துக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications