இந்தியாவை சீண்டி மாட்டிக்காதீங்க.. அமெரிக்காவிற்குத்தான் சிக்கல்.. டிரம்பிற்கு போன வல்லுநர் வார்னிங்
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி, இந்தியா தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவுடனான உறவுகளைச் ட்ரம்ப் சீர்குலைக்கக் கூடாது. இந்தியாவுடனான உறவுகளைப் புறக்கணிப்பது அமெரிக்காவுக்கு ஒரு பேரழிவு என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை வாங் யி, மோடியிடம் வழங்கினார். 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, ராணுவ மற்றும் ராஜதந்திர விவாதங்களை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரி விதிப்பு
அதோடு டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியா - சீனா நெருக்கமாகி உள்ளது. இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும் என்று டிரம்ப் கூறி உள்ளது. ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வந்த நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.
வரி விதிப்பு மட்டுமின்றி, ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்கியதற்கும் டிரம்ப் அபராதம் விதித்தார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணை ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது. இதற்குள் ஒப்பந்தம் செய்ய 1 வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்தியா-அமெரிக்க உறவுகளின் முக்கியத்துவம்
இப்படிப்பட்ட நிலையில்தான் முன்னாள் அமெரிக்க ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி, இந்தியா தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவுடனான உறவுகளைச் ட்ரம்ப் சீர்குலைக்கக் கூடாது என்றுள்ளார். அதில், சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை அவசியம். இது இயற்கையான தேர்வாக இருக்க வேண்டும் என்று ஹேலி வலியுறுத்தினார். இந்தியா-சீனா இடையேயான பதட்டமான உறவுகளை அவர் நினைவூட்டினார். பொருளாதார மோதல்கள் மற்றும் 2020 எல்லை மோதல் இதில் அடங்கும். ஆனால் இப்போது இரண்டு நாடுகளும் கசப்பை மறந்து ஒன்றாக கைகோர்க்கிறது.. இது அமெரிக்காவிற்குத்தான் சிக்கல் என்று எச்சரித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் சீனாவைப் போலல்லாமல், ஜனநாயக இந்தியா வளர்வது சுதந்திர உலகிற்கு அச்சுறுத்தலாக அமையாது. பெய்ஜிங்கிற்கு எதிராக இந்தியாவுக்கு உதவுவது அமெரிக்க நலன்களுக்கு நேரடியாகப் பயன்தரும். ஆனால் டிரம்ப் இதற்கு எதிராக செயல்படுகிறார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, புவிசார் அரசியல் இருப்பிடம் ஆகியவை முக்கியமானவை. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா நமக்கு மிக முக்கியம்.
வர்த்தகப் பதட்டங்களும் அரசியல் எதிர்வினைகளும்
ரஷ்ய எண்ணெய் கொள்முதல், இந்தியாவின் பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகள் கவலைகளை எழுப்பியுள்ளன. ஆனால் சீனாவைப் போன்ற எதிரிகளுடன் இந்தியாவை ஒப்பிட வேண்டாம் என்று ஹேலி வாஷிங்டனை வலியுறுத்தினார். இந்தியா ஒரு போட்டி நாடாக அல்ல, ஆனால் ஒரு மதிப்புமிக்க ஜனநாயக கூட்டாளியாகவே கருதப்பட வேண்டும்.. சீனாவை ஒரு பக்கம் ஆதரித்துக்கொண்டு, இந்தியாவை எதிர்ப்பது சரியாக இருக்காது.. இந்தியாவுடன் மோதுவது அமெரிக்காவிற்குத்தான் எதிர்காலத்தில் சிக்கலாகும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications