நியூயார்க்கில் ஒரே வாரத்தில்.. மகாத்மா காந்தி சிலை 2-வது முறையாக சேதம்.. இந்தியா கண்டனம்!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் மீண்டும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். 2-வது முறையாக காந்திஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட அநாகரீக செயலுக்கு, இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை வைக்கப்பட்டிருந்தது. 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இந்த சிலையை, கடந்த ஆண்டு, சில விஷமிகள் தாக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பான இடத்தில் சிலை வைக்கப்படும் என்று டேவிஸ் நகராட்சி கவுன்சிலர் லூகாஸ் பிரீரிச்ஸ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், மன்ஹாட்டன் யூனியன் சதுக்கத்தில் இருந்த 8 அடி உயர காந்தி சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் காந்தியின் சிலையை அவமதித்தனர்.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு முன்னால் இருந்த மகாத்மா காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த குயின்ஸில் உள்ள கோவிலுக்கு அருகே சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள், ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்து சென்றுள்ளனர்.
இந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது 2-வது முறையாகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 3 அன்று இதே சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அதே சிலை மீது நடந்த 2-வது தாக்குதலில் சிலை முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது. காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், மகாத்மா காந்தி சிலையைச் சேதப்படுத்தியவர்கள் குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் மகாத்மா காந்தியடிகளின் சிலை 2-வது முறையாக சேதப்படுத்திய சம்பவம், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications