'ஜூலை 11ம் தேதி மட்டும் நடந்திருந்தால்'.. தண்டனையில் இருந்து டொனால்டு டிரம்ப் தப்பித்தது எப்படி?
நியூயார்க்: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தீர்ப்பு விவரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் தள்ளிக்கொண்டே போனது. இதற்கு இடையே நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் தற்போது தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
அமெரிக்காவில் 2006-ம் ஆண்டு, டிரம்பிற்கும், அமெரிக்க நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கும் உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2016 அதிபர் தேர்தலில் டிரம்ப் வேட்பாளராக களம் இறங்கிய போது, தன்னுடன் இருந்த உறவு தொடர்பாகப் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு, அதற்கு ஒரு 1.30 லட்சம் டாலரை ஸ்டார்மி டேனியலுக்கு கொடுத்துள்ளார். ஆனால், இந்த நிதியைத் தேர்தல் நிதி என்று கணக்குக் காட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது அமெரிக்க சட்டத்தின் படி, ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கொடுத்த பணம் சட்ட ரீதியானது தான். ஆனால், டிரம்ப் 'தேர்தல் செலவு' என கோஹனுக்கு கொடுத்த பணத்தை பொய் கணக்கு காட்டியது அமெரிக்க சட்டப்படி மிகப்பெரிய தவறாகும்.

டிரம்பிற்கு அதிர்ஷ்டம்: இது தொடர்பான வழக்கு 2018ம் ஆண்டில் இருந்து நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் மொத்தம் 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. நேற்று தண்டனை விவரம் அறிவிப்பதாக அறிவித்திருந்தது நீதிமன்றம். குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கவில்லை.. ஒருவேளை சிறை தண்டனை விதித்திருந்தால் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக டிரம்புக்கு அப்படி ஏதுவும் நடக்கவில்லை..
ஜூலை 11: தற்போதைய நிலையில், ஒரு வேளை இந்த வழக்கில் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்புக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அமெரிக்க பொதுமக்கள் எப்படி எதிர்வினையாற்றியிருப்பார்கள் அல்லது வாக்களித்திருப்பார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. உண்மையில் இந்த வழக்கில் டிரம்புக்கு ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி தண்டனை அறிவிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தீர்ப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
டிரம்பிற்கு சாதகம்: இதுதான் டிரம்பிற்கு சாதகமாக மாறியது. டிரம்பின் தேர்தல் பெற்ற வெற்றி காரணமாக ரகசிய பண வழக்கு விவாகரதத்தில் சட்டப்பூர்வ தண்டனையில் இருந்து தப்பிக்க உதவியது, உண்மையில் நீதிபதி மெர்ச்சன், டிரம்பிற்கு தண்டனை ஏதுவும் விதிக்கவில்லை.. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட டிரம்பிற்கு , அந்த வழக்கில் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீதிபதி அந்த தண்டனையை நேற்று அவருக்கு அறிவிக்கவில்லை... ஏன் ஒரு மாத சிறை அல்லது வீட்டுச் சிறைவாசம் அல்லது சமூக சேவை போன்ற குறைந்த தண்டனைகளை தந்திருக்கலாம். ஆனால் அதையும் நீதிபதி தரவில்லை.
மேல்முறையீடு: குற்றவாளி என்ற அந்தஸ்துடன் டிரம்ப் பதவியேற்கிறார் என்ற தண்டனையை மட்டும் நீதிபதி தந்திருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே டிரம்ப் என்ன தான் தண்டனை இல்லை.. அதிபராகவே பதவியேற்றாலும் குற்றவாளி என்ற அவமானம் இருக்கிறது. அதை துடைக்க வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். அதற்காக அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
டிரம்ப் வழக்கறிஞர்கள்: டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது. இந்த வழக்கில் நீதிபதி மெர்ச்சன் இப்போது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளதால், டிரம்பின் சட்டக் குழு நியூயார்க் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது .
அட்டர்னி ஜெனரல் யார்: வெள்ளிக்கிழமை அன்று டிரம்பின் அருகில் அமர்ந்திருந்த டாட் பிளாஞ்ச் தான் அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். , டிரம்பின் சார்பாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரான எமில் போவ், முதன்மை இணை அட்டர்னி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
டிரம்பிற்கு அவமானம்: இந்நிலையில் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒருவேளை நியூயார்க் மாகாண உயர்நீதிமன்றம் உறுதி செய்தால், தனது வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார். இன்னும் 10 நாளில் அதிபராகும் டிரம்ப், குற்றவாளி என்ற தீர்ப்புடன் பதவியேற்பது அவரை நிச்சயம் மனரீதியாக பாதிக்கும் என்கிறார்கள். ஏனெனில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் அமெரிக்க அதிபராவது வரலாற்றில் இதுதான் முதல்முறை.












Click it and Unblock the Notifications