இஸ்ரேல் போரில் ஆதரவு யாருக்கு? ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சலசலப்பு! அசராமல் நின்று பதிலளித்த இந்தியா
நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானத்தை முன் வைத்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை இந்தியா தெளிவாக விளக்கியுள்ளது.
கடந்த 7ம் தேதி ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு எதிராக கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் 2,704 குழந்தைகள் உட்பட 6,546 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று கூடிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான விவாதங்கள் மேலெழுந்தன. குறிப்பாக அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக தீர்மானத்தை முன்வைத்தது. இந்த தீர்மானத்தில், "இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை ஈரான் நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு 10 நாடுகள் வாக்களித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதற்கு எதிராக வாக்களித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் குறைந்தது 9 வாக்குகளை பெற வேண்டும். குறிப்பாக வீட்டோ அதிகாரத்தை யாரும் பயன்படுத்தியிருக்கக்கூடாது. ஆனால் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்தது. அதேபோல ரஷ்யா, "மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும். காசா மக்களை தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் பிறப்பித்துள்ள உத்தரவு வாபஸ் பெற வேண்டும்" என தீர்மானத்தை முன்வைத்திருந்தது. ஆனால் இது போதுமான வாக்குகளை பெறாததால் தோல்வியை தழுவியது. ரஷ்யாவின் போர் நிறுத்த தீர்மானம் தோல்வியடைந்ததுள்ளதால், போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய துணை தூதர் ரவீந்திரா, "இறையாண்மை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீனத்துக்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும்" என்று கூறியுள்ளார். அதாவது, "ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையில் பொதுமக்கள் ஏராளமாக உயிரிழப்பது, பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வருவது குறித்து இந்தியா மிகுந்த கவலையடைந்துள்ளது. மனிதத்தன்மைக்கு எதிரான செயல்கள் அதிகரித்துள்ளதும் ஆபத்தாக உள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நம்பகமான மற்றும் நேரடியான பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்குவதற்கான தேவையை தற்போதைய நிலை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும், அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.
குறிப்பாக அமைதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள்ளும் வாழ்வதற்கும், இறையாண்மை கொண்ட சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வழிவகுக்கும் திட்டங்களுக்கும் இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும். சமாதானம் உருவாகும் வரை இருநாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். மறுபுறம் தனது பாதுகாப்பு குறித்து இஸ்ரேலின் நியாயமான கவலைகள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார். அதேபோல இந்த கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் பேசியதற்கும் ரவீந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து இன்று ஐநா பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் வரைவு தீர்மானத்தை முன்வைக்கும். 193 உறுப்பு நாடுகள் இதன் மீது வாக்களிக்கும். இதில் வீட்டோ பவரை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications