உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையா? இல்லவே இல்லை.. வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டி!
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பேட்டி அளித்துள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாகச் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி நேற்றிரவு நியூயார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ட்விட்டர் நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெளிவரும் உலக அளவில் பிரபலமான 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் உலக நாடுகள் விவகாரத்தில் இந்தியாவின் பார்வை குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
வால் ஸ்ட்ரீட்டுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், "சுதந்திர இந்தியாவில் பிறந்து முதன்முதலில் பிரதமர் ஆனது நான்தான். எனவே தான் எனது சிந்தனை செயல்முறை, எனது நடத்தை, எனது சொல், செயல் எனது நாட்டின் பண்புகளாலும், மரபுகளாலும் ஈர்க்கப்பட்டு தாக்கம் செலுத்துகிறது. அதிலிருந்து நான் எனது வலிமையைப் பெறுகிறேன். எனது நாட்டை நான் உலகில் முன்னிலைப்படுத்துகிறேன்.
உலக அரங்கில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த, ஆழமான, பரந்த பங்களிப்பு உள்ளது. அமெரிக்கா, இந்தியா தலைவர்கள் இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை நிலவுகிறது. இரு தரப்பு கூட்டுறவின் முக்கிய தூணாக ராணுவ ஒத்துழைப்பு உள்ளது. இது இரு தரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகியவற்றுக்கு விரிவாக்கம் செய்கிறது.
சீனா உடனான இயல்பான உறவில், அமைதியும், சமாதானமும் எல்லைப்பகுதிகளில் நிலவுவது முக்கியம். நமது இறையாண்மையையும், இரு நாடுகளின் ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும், கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் ஆகிய விஷயங்களில் சட்டத்திற்குட்பட்டு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும்.
உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா, அமைதியின் பக்கம்தான் இருக்கிறது. இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதிதான் என்பதில் உலகம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
எல்லா நாடுகளும், சர்வதேச சட்டத்தையும், நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளும், ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர போரினால் அல்ல." எனக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.












Click it and Unblock the Notifications