"அவங்க கதையை முடிச்சிடுங்க".. இஸ்ரேல் பீரங்கி குண்டில் எழுதிய இந்திய வம்சாவளி அமெரிக்க அரசியல்வாதி!
நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதியான நிமராதா நிக்கி ஹேலி, இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி குண்டில், 'அவர்களை முடித்துவிடுங்கள்' என்று எழுதியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இருப்பினும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவும், பாலஸ்தீனத்திற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய வம்சாவளி அமெரிக்க அரசியல்வாதியான நிமராதா நிக்கி ஹேலி இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி குண்டில், 'அவர்களை முடித்துவிடுங்கள்' என்று எழுதியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நிமராதா நிக்கி ஹேலி கடந்த 2011 முதல் 2017 வரை தெற்கு கரோலினாவின் 116வது ஆளுநராகவும், ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான 29 வது அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், ஜனாதிபதி அமைச்சரவையில் இடம்பிடித்த முதல் இந்திய அமெரிக்கர் ஆவார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்நாட்டு மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர். மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications