Indian Man Kills Sex Offender in US: அலறிய அமெரிக்கா.. இந்திய இளைஞர் கைது! பிஞ்சு குழந்தைக்காக.. இப்படி பண்ணிட்டாரே!
நியூயார்க்: பாலியல் குற்றங்கள் உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அதிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். இந்நிலையில் கலிபோர்னியாவில் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை, இந்தியர் ஒருவர் பழி தீர்த்திருக்கும் சம்பவம் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
எல்லா உயிர்களுக்கும் பாலுணர்வு இயல்பானதுதான் என்றாலும், நாகரிகம் அடைந்த மனிதன் இந்த விஷயத்தில் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாமல் இருக்கிறான். பெண்களை அவர்கள் விருப்பமின்றி அணுகுவது தவறு, தண்டனைக்குரிய குற்றமாகும். எல்லா நாடுகளிலும் பாலியல் குற்றத்திற்கு தண்டனைகள் உண்டு. அதுவும் அமெரிக்காவில் பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனைகள் கூட விதிக்கப்படுகின்றன. அதேபோல அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் விதமாக மெகான்ஸ் சட்டம் அமலில் இருக்கிறது.

அதாவது ஒருவர் பாலியல் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் அவருடைய பெயர், முகவரி, கைரேகை, புகைப்படம் ஆகியவை காவல்துறை தனது பதிவேட்டில் அப்டேட் செய்துக்கொண்டே இருக்கும். இதன் மூலம் பாலியல் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும். காவல்துறையின் இந்த பதிவேடு பொதுமக்களின் பார்வைக்கு இணையத்தில் கிடைக்கிறது. யார் வேண்டுமானாலும் அதை பார்த்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்.
இந்த போலீஸ் பதிவேட்டில் டேவிட் பிரிம்மர் எனும் 71 வயது நபரின் பெயர் இருந்திருக்கிறது. அவர் நேற்று கழுத்தறுத்து கொல்லப்பட்டிருக்கிறார். இது குறித்து கலிபோர்னியா காவல்துறையினர் கூறுகையில், "கலிபோர்னியாவின் ஃபிரீமாண்ட் எனும் நகரில் பிரிம்மர் வசித்து வந்திருக்கிறார். இவர் கடந்த 1995ல் ஒரு குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்திருந்தார். இவரது பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியை மெகான்ஸ் சட்ட பதிவேட்டில் இடம்பெற்றிருந்தது.
இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான வருண் சுரேஷ்(29), இந்த பதிவேட்டை பார்த்து பிரிம்மர் குறித்து தெரிந்துக்கொண்டுள்ளார். பின்னர் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியாளர் போல வேடமணிந்து பிரிம்மர் வீட்டு கதவை தட்டி இருக்கிறார். கதவை பிரிம்மர் திறக்க, அவரை பார்த்து "நான் சரியான ஆளைத்தான் கண்டுபிடித்திருக்கிறேன்" என்று வருண் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். பின்னர்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரிம்மரின் கழுத்தில் சொருக, இதை சற்றும் எதிர்பார்க்காத பிரிம்மர் தெறித்து ஓடியுள்ளார்.
ஆனாலும் விடாமல் துரத்தி சென்ற வருண், பக்கத்து வீட்டின் சமையலறையில் வைத்து பிரிம்மரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து நாங்கள் வருணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வருண் எந்த குற்றவுணர்வும் இல்லாமல், 'பாலியல் குற்றவாளிகள் அனைவரும் சாக வேண்டியவர்கள்தான். அவர்களை கொல்வது எனது கடமை. இது வேடிக்கையாக இருந்தது' என்று கூறினார்.
இது தனிநபர் மீதான தாக்குதல்தான். எனவே இதை பார்த்து பயப்பட வேண்டியதில்லை. பொதுமக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை" என்று போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications