சான்பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் மீது அட்டாக்! காலிஸ்தான் குழுவினருக்கு எதிராக என்ஆர்ஐக்கள் பேரணி
நியூயார்க்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது கடந்த வாரம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இதற்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைதி பேரணி நடத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. தனிநாடு கோரிக்கையை மையமாக வைத்து பல அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் 'வாரிஸ் பஞ்சாப் டி' எனும் அமைப்பு இதில் தீவிரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவராக உள்ள அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

காரணம் இந்த அமைப்பின் மீது இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகள் கடந்த காலத்தில் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதுதான். அதேபோல கைது செய்யப்பட்ட தங்கள் அமைப்பின் நிர்வாகியை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பு வலியுறுத்தியிருந்தது. ஆனால் இதனை பஞ்சாப் காவல்துறையினர் கண்டுக்கொள்ளாமல் தவிர்த்துவிட்டனர். இதனையடுத்து இந்த அமைப்பினர் பலர் வாள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்காரர்கள் பேரணியாக தங்கள் நிர்வாகி கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையை நோக்கி வந்தனர்.
தொடக்கத்தில் குறைவான அளவில் மட்டுமே ஆட்கள் இருந்த நிலையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டபோது இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருந்தது. எனவே காவல்துறையும் சம்பந்தப்பட்ட நபரை விடுவிப்பதாக ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த சம்பவம் அம்மாநில காவல்துறைக்கு அவமானகரமானதாக மாறியது. எனேவே காலிஸ்தான் போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியது. அதன்படி வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை தீவிரமாக தேடி வந்தது. இதற்கு அம்மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இருபினும் அம்ரித்துக்கு நெருக்கமானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஸ்கெட்ச் தனக்குதான் என்பதை உணர்ந்த அம்ரித் உடனடியாக தலைமறைவாகினார். மறுபுறம் போலீஸின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்த தொடங்கினர். போராட்டம் சில இடங்களில் வன்முறையாக வெடித்தது. இந்தியாவிலிருந்து மற்ற மாநிலங்களை விட பஞ்சாப் மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். எனவே இந்த போராட்டம் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகியது. கடந்த வாரம் லண்டனில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இதேபோல அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போராட்டம் நடத்தியவர்கள் ஒரு கட்டத்திற்கு பின்னர் தூதரகத்திற்கு உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். அங்கு பணியாற்றிய அதிகாரிகளையும் மிரட்டியுள்ளனர். தேசிய கொடியையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் இன்று பேரணியை நடத்தியுள்ளனர். பேரணிக்கு அப்பகுதி மக்கள் அதிக அளவில் ஆதரவளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications