லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான்
நியூயார்க்: சர்வதேச அரசியலில் தற்போது 'ஹாட் டாபிக்' என்றால் அது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல்தான். இரண்டு தரப்பிற்கும் மோதல் முடிந்துவிட்டது.. ஹார்மூஸ் ஜலசந்தியை திறந்துவிட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது ஈரான் மீண்டும் அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராகி உள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கப்போகிறது என உலக ஊடகங்கள் செய்திகளைத் தீயாய் பரப்பிக் கொண்டிருக்க, ஈரான் தரப்பிலிருந்து வந்திருக்கும் 'நோ' பதில் ஒட்டுமொத்தப் பார்வையும் திசைதிருப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை இந்த பதில் திணறடித்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கிளப்பிய புயல்!
அமெரிக்காவின் பிரபல நாளிதழான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', "ஈரான் நாட்டுத் தூதுக்குழு ஒன்று ரகசியமாக இஸ்லாமாபாத் சென்றுள்ளது. அங்கு அமெரிக்க அதிகாரிகளுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது" என ஒரு செய்தியை வெளியிட்டது. அடுத்த சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில் இது காட்டுத்தீயாகப் பரவியது. ஆனால், ஈரான் அரசுக்குச் சொந்தமான 'ஃபார்ஸ்' (Fars News) மற்றும் 'தஸ்னிம்' செய்தி நிறுவனங்கள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளன.
"இஸ்லாமாபாத்துக்கு நாங்கள் யாரையும் அனுப்பவில்லை; இப்போதைக்கு அமெரிக்காவுடன் பேசும் எண்ணமும் எங்களுக்கு இல்லை" என ஈரான் கறாராகச் சொல்லிவிட்டது.
ஈரானின் டிமாண்ட் என்ன?
ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் ஒரே நிபந்தனை: "லெபனான் போர் நிறுத்தம்." லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதில் ஈரான் பிடிவாதமாக இருக்கிறது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப் இதுகுறித்துப் பேசுகையில், "லெபனான் தனித்துவிடப்படவில்லை. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒழிய, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் காட்டிய 'கெடு'!
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில் அதிரடி காட்டி வருகிறார். ஈரான் மீது விதிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு இரண்டு வார கால இடைக்காலத் தடையை அவர் அறிவித்திருந்தார். ஆனால், ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை ஈரான் தடுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
"ஈரான் ஒப்பந்தத்தை சரியாக மதிக்கவில்லை. எண்ணெய் விநியோகம் சீராக வேண்டும்; இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்" என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
நிதர்சனம் என்ன?
வழக்கமாக நாளொன்றுக்கு 140 கப்பல்கள் கடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில், தற்போது ஒரு சில கப்பல்கள் மட்டுமே கடந்து செல்கின்றன. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை அதிகாலை கூட லெபனானில் உள்ள ஏவுதளங்களைத் தாக்கியுள்ளது. பதிலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பும் ஹைஃபா நகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
"லெபனான் விவகாரம் பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது" என ஈரானும், "பேச்சுவார்த்தைக்கும் லெபனானுக்கும் சம்பந்தமில்லை" என அமெரிக்காவும் பிடிவாதம் காட்டுவதால், இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த 'மத்தியஸ்தம்' தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா அல்லது உலகப் பொருளாதாரம் இந்த 'ஈகோ' யுத்தத்தில் சிக்கிச் சிதையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications