"2 புயல்ங்க".. இன்னும் முடியலயாமே.. பீதியில் உறைந்து கிடக்கும் கலிபோர்னியா.. விழிபிதுங்கும் மக்கள்
கலிபோர்னியா மாகாணத்தில் 2 புயல்கள் வர போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
நியூயார்க்: அடுத்தடுத்த புயல்களில் சிக்கி கொண்டுள்ளது கலிபோர்னியா மாகாணம்... இனியும் புயல்கள் அங்கு வரக்கூடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த சில நாட்களாகவே, கடும் புயல் வீசியதில், ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.. இதைதவிர, பனிப்பொழிவு, பலத்த காற்று வீச்சு காரணமாக, இதுவரை 19 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்..
கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் எந்நேரமும் மழை பெய்துவருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன..

திணறல்
கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்து மக்களை திணறடித்துவிட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டது.. இந்த புயல் மழையின் காரணமாக அம்மாகாணத்தை சேர்ந்த 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதேபோல, தெற்கு கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவை பொறுத்தவரை, கார்மெல் மற்றும் பெப்பிள் பீச் ஆகியவை மிக பெரிய சுற்றுலா தலங்களாக திகழ்பவையாகும்..

பேராபத்து
இங்குள்ள சாலினாஸ் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பேராபத்து ஏற்பட கூடும் அபாயமும் உள்ளது.. அதனால், சுற்றுலாவாசிகளுக்கு தடை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. அந்த ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 24 ஆயிரம் பேரை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்... எனினும் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அடங்கவில்லை.. வெள்ளம் வீடுகளை சூழ்ந்து காணப்படுகின்றன.. கட்டிடங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன... மரங்கள் வேருடன் சாய்ந்து கிடக்கின்றன.. கரண்ட் கம்பங்கள் சரிந்துள்ளன... நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றன..

கரண்ட் கம்பங்கள்
அதனால், மக்கள் பாதுகாப்பு தேடி புலம்பெயர்ந்து வருகிறார்கள். இப்போதைக்கு 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் கரண்ட் இல்லாமல் உள்ளது.. லட்சக்கணக்கான மக்கள் மின் வினியோகம் பாதித்து அவதிப்படுகின்றனர்.. இதுகுறித்து கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசோம் சொல்லும்போது, ‘மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதியில் இருந்து 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் புயல் மழை வருவதற்கும், மக்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பாதிப்பு வருகின்ற 18ம் தேதி வரை இருக்கும் என்று தெரிகிறது' என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

2 புயல்ங்க
கலிபோர்னியாவை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களில் மட்டும் 7 பருவ கால புயல்கள் பாதிப்பை ஏற்படுத்தி சென்று உள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் 2 புயல்கள் கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதியை பாதிக்ககூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. 2 புயல்கள் வீசக்கூடும் என்பதுடன், நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளது எச்சரிக்கை வெளியாகி உள்ளதால், இதனால் பீதியில் உள்ளனர் அம்மாகாண மக்கள்..












Click it and Unblock the Notifications