"டர்புலன்ஸ்".. நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம்.. பயணி உயிரிழப்பு.. நடந்தது என்ன?
டர்புலன்ஸில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழிப்பது என்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடுவானில் விமானம் சென்ற போது டர்புலன்ஸில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் பலர் காயமடைந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விமானங்கள் வானில் செல்லும் போது சில நேரங்களில் டர்புலன்ஸில் (Turbulance) சிக்குவது உண்டு. இது வழக்கமானது என்றாலும் சில நேரங்களில் கடுமையாக விமானம் குலுங்கி பயணிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விடும்.
எனினும், டர்புலன்ஸில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழிப்பது என்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

குலுங்கிய விமானம்
அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்ஃபைர் மாகாணத்தில் உள்ள கீனி நகரத்தில் இருந்து விர்ஜினியா மாகாணத்தில் உள்ள லீஸ்பர்க் நகருக்கு 'பாம்பார்டியர் சேலஞ்சர்' என்ற விமானம் நேற்று சென்று கொண்டிருந்தது. 300 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர். அப்போது திடீரென ஒரு பெரிய மேகக்கூட்டத்துக்குள் விமானம் சென்றது. இதில் சில நிமிடங்களிலேயே விமானம் பயங்கரமாக குலுங்க தொடங்கியது. இதனால் விமானம் விபத்தில் சிக்கிவிட்டது என எண்ணி பயணிகள் அச்சத்தில் கத்த தொடங்கினர்.

பறந்த பயணிகள்
அப்போது அங்கு வந்த விமான ஊழியர்கள், பயணிகளிடம், விமானம் விபத்தில் சிக்கவில்லை என்றும், டர்புலன்ஸ் ஏற்பட்டுள்ளது எனவும் விளக்கினர். ஆனால், பயணிகளுக்கு பயம் குறையவில்லை. இந்த சூழலில், அடுத்ததாக மிகப்பெரிய டர்புலன்ஸில் விமானம் சிக்கியது. இதனால் மிக மோசமாக விமானம் குலுங்கியது. இதில் சீட் பெல்ட் அணியாதவர்கள் அப்படியே இருக்கையில் இருந்து பறந்து சென்று விழுந்தனர். சிலர் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர்.

ஒருவர் உயிரிழப்பு
சுமார் 15 நிமிடங்கள் இந்த டர்புலன்ஸில் சிக்கிய விமானம், பின்னர் சீரானது. இதனிடையே, டர்புலன்ஸில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு விமானக் குழு உறுப்பினர்கள் முதலுதவி செய்தனர். அதில் ஒரு பயணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு நிற்காமல் இருந்தது. இதையடுத்து, அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு, அந்தப் பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விமானம் டர்புலன்ஸில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பது என்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

அது என்ன டர்புலன்ஸ்?
பொதுவாகவே, காற்றில் ஒரு இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த இயக்கம்தான் விமானம் வானில் பறப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு செல்லும் விமானம் சீராக பறப்பதற்கு அதன் இறக்கைகளுக்கு கீழ் பகுதியில், இந்த காற்று இயக்கம் சீராக இருக்க வேண்டும். பெரும்பாலும் இந்த காற்று சீரான இயக்கத்திலேயே இருக்கும். ஆனால், மிக அரிதாக இந்த இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும். அப்போதுதான், சமநிலை பாதிக்கப்பட்டு விமானம் குலுங்கும். இதுதான் 'டர்புலன்ஸ்' என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான சம்பவம் என்ற போதிலும், அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர்கள் நிச்சயம் ஒரு முறையாவது இந்த டர்புலன்ஸை அனுபவப்பட்டிருப்பார்கள்.












Click it and Unblock the Notifications