அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்
நியூயார்க்: ஐ.நா. பொது சபையில் செப்டம்பர் 28-ல் பிரதமர் மோடி உரை கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொது சபை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

அதன்படி செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றுகிறார். செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு தொடர்பான உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் 74-வது உலகத்தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அவர் தனது நியூயார்க் பயணத்தின் போது பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பையும், பிரதமர் மோடி சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நியூயார்க் செல்லும் முன் செப்டம்பர் 22-ம் தேதி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு முதல்முறையாக பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications