ரூ. 4.9 கோடிக்கு ஏலம்.. புதிய சாதனை படைத்தது இளவரசி டயானாவின் ‘பழைய’ ஊதா நிற கவுன்!
நியூயார்க் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஒன்று ரூ.4.9 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்: மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆடை ஒன்று, இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முதல் மனைவியான டயானா, அழகிற்கு மட்டுமல்ல, அணியும் ஆடைகளாலும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர். ஒவ்வொரு முறையும் அவர் அணியும் ஆடைகளை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் அவருக்கு உண்டு. சார்லஸைப் பிரிந்த பிறகும்கூட, அவர் பிரபலமானவராகவே வாழ்ந்தார்.
டயானா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதும்கூட, இன்னமும் அவரது உடைகளுக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான், 1997ம் ஆண்டு டயானா அணிந்த கவுன் ஒன்று தற்போது அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஊதா நிற கவுன்
பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளரான விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்த இந்த கவுனானது ஊதா நிறத்திலானது. டயானாவுக்கென பிரத்யேகமாக இந்தக் கவுனை விக்டர் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. 1991 இல் இளவரசி மார்கரெட்டின் கணவர் லார்ட் ஸ்னோடனால் எடுக்கப்பட்ட அரச உருவப்படத்திலும், 1997 ஆம் ஆண்டு புகழ்பெற்ற வேனிட்டி ஃபேர் போட்டோஷூட்டிலும் டயானா இந்தக் கவுனை அணிந்திருந்தார்.
ஏலத்தில் விற்பனை
சார்லஸைப் பிரிந்த பிறகு, 1997ம் ஆண்டு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக டயானா தனது 80 ஆடைகளை விற்பனை செய்தார். அதன் பிறகு இப்போதுதான் அவரது ஆடை ஒன்று ஏலத்தில் விற்பனைக்கு வந்தது. எனவே இந்தக் கவுனை எடுப்பதற்கு அதிக போட்டோ போட்டி காணப்பட்டது.
சாத்பைஸ் நிறுவனம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான 'சாத்பைஸ்' நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அதில், டயானாவின் இந்த கவுன் 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 4.9 கோடி ரூபாய் ஆகும்.
புதிய சாதனை
இதன்மூலம், இது நடைபெற்ற அவரது ஆடைகளின் ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் இந்த கவுன் பெற்றுள்ளது. இந்த கவுனானது 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாக சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.