செனட் சபையை கைப்பற்றியது குடியரசுக் கட்சி! அமைச்சரவையில் இனி டிரம்ப் ஆதிக்கம்தான்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டிரம்ப் தரப்பு செனட் சபையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் புதிய அதிபரின் அமைச்சரவையை நிர்வகிப்பதில் குடியரசு கட்சி முக்கிய பங்கை உறுதி செய்துள்ளது.
உலக அரசியல் வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தம் அளவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைவதால், அடுத்த அதிபருக்கான தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். மறுபுறம் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கினார்.

முதலில் ஜோ பைடன்தான் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால், வயது மூப்பு காரணமாக அவரால் தேர்தல் பிரசாரங்களில் வீரியமாக பங்கெடுக்க முடியவில்லை. பேச்சில் தடுமாற்றம், உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு பதில் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார். போர் நடவடிக்கைகளை குறைப்பது, ஆயுத கட்டுப்பாடு, பரந்துப்பட்ட ஜனநாயகம், ஓரளவுக்கு முற்போக்கான கொள்கைள் போன்றவற்றால் கமலா ஹாரிஸுக்கு தேர்தலில் மவுசு கூடியிருக்கிருக்கிறது. இந்த ஆதரவு அலை அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லுமா என்பது இன்றும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
அதேபோல மறுபுறம், சர்வாதிகார போக்கு, உலக நாடுகளுக்கு எல்லாம் வல்லரசாக மீண்டும் அமெரிக்க தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் டிரம்ப்புக்கும் பெருமளவில் ஆதரவு இருக்கிறது. எலான் மஸ்க் தொடங்கி பல முக்கிய தலைக்கட்டுகள் டிரம்புக்கு ஆதரவளித்துள்ளனர்.
அமெரிக்காவில் வாக்காளர்களின் வாக்குகள் நேரடியாக வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக கட்சிகள் நியமிக்கும் பிரதிநிதிகளின் வாக்குகளே வெற்றியாளரை தேர்ந்தெடுக்கின்றன. உதாரணமாக கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றும் கூட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்ட்ன் தோற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது பகல் 12.30 மணி நிலவரப்படி, செனட் அவையில் பெரும்பான்மையான இடங்களை குடியரசு கட்சியின் டிரம்ப் தரப்பு கைப்பற்றியுள்ளது. கமலா ஹாரிஸ் தரப்பு பெரும்பான்மையை இழந்திருக்கிறது. இதில் 50 இடங்களை வென்றால் பெரும்பான்மை கிடைக்கும். டிரம்ப் தரப்பு 51 இடங்களை கைப்பற்றியுள்ளது. கமலா தரப்பு 42 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. பெரும்பான்மையை பெற்றதன் மூலம் புதிய அதிபரின் அமைச்சரவையை உறுதி செய்வதில் டிரம்ப் தரப்பு முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நியமனமும் டிரம்ப் தரப்பு வசம்தான் இருக்கும்.
இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனில் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டும். தற்போது வரை டிரம்ப் 248 வாக்குகளையும், கமலா 214 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றாலும், வரும் ஜனவரி மாதம்தான் புதிய அதிபர் பதவியேற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications