அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தும் துப்பாகிச்சூடு சம்பவங்கள்.. மேலும் 3 பேர் பலி.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கட்டுப்படுத்த அரசு அவ்வப்போது முயற்சி எடுத்தாலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள கிரீன்வுட் பார்க் மாலில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மேயர் மார்க் மியர்ஸ் தெரிவித்துள்ளார். அதேபோல இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மற்றொரு நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தமாதிரியான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இயல்பானவை. ஆனால் இந்த சம்பவங்களால் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 பேர் உயிரிழக்கின்றனர் என துப்பாக்கி வன்முறைக் காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவமானது, கடந்த ஜூலை 4ம் தேதி நடந்த அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்னர் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதேபோல கடந்த மே மாதத்தில் ஒரு மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் 19 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த கடந்த ஜூன் 24ம் தேதி துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்ற அவையில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி 21 வயதிற்குப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வாங்கச் சென்றால் அவர்களுக்கு விரிவான சோதனை நடத்தப்படும். பொதுமக்களின் மனநலனை மேம்படுத்த $11 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் அதேபோல பள்ளி பாதுகாப்பு திட்டங்களுக்கு $2 பில்லியன் ஒதுக்கப்படுகிறது. மேலும், அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதைத் தடை செய்ய மாகாண அரசுகள் சட்டத்தைக் கொண்டு வர ஊக்குவிக்க நிதியுதவி வழங்கும் முன்மொழிவும் இதில் உள்ளது.
அதேபோல திருமணமானவர்களில் ஒருவர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால், ஏற்கனவே இருக்கும் சட்டப்படி அவர்களால் துப்பாக்கி வைத்திருக்க முடியாது. இருப்பினும், அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் வாழ்ந்தால் இந்த விதியின் கீழ் துப்பாக்கியைத் தடை செய்ய முடியாது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் காதலன் மற்றும் லிவ்இன் உறவில் வாழ்பவர்களையும் உள்ளடக்கி உள்ளது.
இந்த சட்ட திருத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னர் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications