22 வயதில் இறந்த நோயாளி.. கல்லறையிலிருந்து உடலை தோண்டி எடுத்து 7 வருடம் குடும்பம் நடத்திய மருத்துவர்!
நியூயார்க்: காதல் என்ற பெயரில் நடக்கும் பல வினோதமான சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக மிக விசித்திரமான சம்பவம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்துள்ளது. பெண் ஒருவர் மீது கொண்ட ஈர்ப்பால் ஒருவர், இறந்த உடலுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த விசித்திரமான கதையாகும்.
அமெரிக்காவின் புளோரிடாவில் 1931ம் ஆண்டு அப்போது 22 வயதான எலெனா டி ஹயோஸ் என்பவர் புளோரிடாவின் கீ வெஸ்ட்டில் உள்ள மரைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்போது காசநோய்க்குச் சிகிச்சைகள் இருக்கும் போதிலும், அந்த காலகட்டத்தில் அது மிகவும் ஆபத்தான நோயாக இருந்தது.

வினோத காதல்
கார்ல் டான்ஸ்லர் அதே மருத்துவமனையில் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்தார். அவர் ஒரு மருத்துவர் இல்லை என்றாலும், எலெனாவைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார். இதனால் டான்ஸ்லர் விசித்திரமான சிகிச்சைகளை மேற்கொண்டார். மருந்துகள் மற்றும் எலக்டிரோட்களை கூட பயன்படுத்தினார். எலெனா மீது பார்த்தவுடன் காதல் ஏற்பட்டதால் அவர் இதையெல்லாம் செய்து பார்த்தார். அவர் தன் காதலையும் மரண படுக்கையில் இருந்த எலெனாவிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, எலெனா 1931ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி உயிரிழந்தார். தனது காதலை ஏற்காவிட்டாலும் எலெனா மீது டான்ஸ்லரின் அன்பு நீடித்தது. எலெனாவின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட டான்ஸ்லர், ஒரு பெரிய கல்லறையையும் கட்டினார்.. அடுத்து இரண்டு வருடங்கள், ஒவ்வொரு இரவும் அவரது கல்லறைக்குச் சென்று பரிசுகளை வைத்து வந்தார்.
கல்லறையில் இருந்து திருட்டு
இதற்கிடையே எலெனாவின் உடலுடன் டான்ஸ்லர் வாழ்ந்து வருவதாக 1940ம் ஆண்டு உள்ளூர் மக்களிடையே தகவல் பரவியது. எலெனாவின் சகோதரி அவரைச் சந்தித்தபோது, அது உண்மை என்பதைக் கண்டறிந்தார். அதாவது 1933ம் ஆண்டிலேயே எலெனாவின் உடலைக் கல்லறையிலிருந்து டான்ஸ்லர் எடுத்துவிட்டாராம். அவர் கோட் ஹேங்கர்கள், மெழுகு மற்றும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி உடலைப் பாதுகாத்து வந்திருக்கிறார். மேலும், எலெனாவின் முகத்தை பிளாஸ்டர் கொண்டு சரிசெய்திருக்கிறார். இது மட்டுமின்றி உண்மையான கூந்தலில் இருந்து விக் ஒன்றையும் தயார் செய்துள்ளார்.
நம்பிக்கை
இதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் எலெனாவின் உடலுக்கு ஆடைகளை அணிவித்து, நகைகளைப் போட்டு, அதைத் தன் படுக்கையில் வைத்துக்கொண்டார். எலெனாவை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று டான்ஸ்லர் நம்பினார். இதற்காக அவர் ஒரு விமானம் போன்ற ஆய்வகத்தை உருவாக்கினார். அதை விண்வெளியில் பறக்க வைப்பதன் மூலம் எலெனாவிற்கு மீண்டும் உயிர் வரும் என்று அவர் நம்பினார்.
இந்த தகவல் தெரியத் தெரிய வந்ததும், டான்ஸ்லர் பிணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், நடவடிக்கைக்கான கால வரம்பு முடிந்துவிட்டதால் அந்த குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. மேலும், எலெனாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலில் விசித்திரமான மாற்றங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும், பாலியல் செயல்கள் எதுவும் இல்லை.
7 ஆண்டுகள் சடலத்துடன் குடும்பம் நடத்தியவர்
ஒருவர் சுமார் 7 ஆண்டுகள் சடலத்துடன் வாழ்ந்து வந்த செய்தியை வெளியாகி அப்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இருப்பினும், அப்போது ஊர் மக்கள் டான்ஸ்லர் மீது பரிதாபப்பட்டனர். எலெனாவின் உடல் ஒரு சவக்கிடங்கில் பொதுமக்கள் பார்வைக்குக் கூட வைக்கப்பட்டது. பின்னர் அது ரகசியமாக ஒரு கல்லறையில் மீண்டும் புதைக்கப்பட்டது.
வினோதம்
கார்ல் டான்ஸ்லர் 1877ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவில் பிறந்தார். அவர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு திடீரென குடும்பத்தைக் கைவிட்டார். கருமையான முடி கொண்ட நபரே தனது உண்மையான காதல் என்று அவர் நம்பினார். அதுதான் எலெனா என்றும் அவர் நினைத்தார். இதன் காரணமாகவே அவர் இதுபோல சடலத்தை எல்லாம் திருடினார். கடைசியாக அவர் 1952-ஆம் ஆண்டில் இறந்தார். அப்போதும் எலெனாவின் முழு உருவப் பொம்மை ஒன்று அவரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications