சூடுபிடித்தது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம்! லண்டன், பாரீஸிலும் மாணவர்கள் கொந்தளிப்பு!
நியூயார்க்: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனம் மீதான போருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தற்போது வரை 550க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா இந்த போர் குறித்து வாய் திறக்க மறுக்கிறது. அதேபோல இந்த போராட்டம் பாரிஸ், லண்டனுக்கும் பரவியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போது வரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்த போராட்டம்
1. நியூயார்க் பல்கலைக்கழகம்,
2. மினசோட்டா பல்கலைக்கழகம்
3. ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
4. ஓஹியோ மாநில பல்கலைக்கழகம்
5. கலிபோர்னியா பல்கலைக்கழகம்-பெர்க்லி
6. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
7. டெக்சாஸ்-ஆஸ்டின் பல்கலைக்கழகம்
8. மிச்சிகன் பல்கலைக்கழகம்
9. எமர்சன் கல்லூரி
10. எம்ஐடி
11. டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம்
12. யேல் பல்கலைக்கழகம்
13. தி நியூ ஸ்கூல்
14. லாஸ் ஏஞ்சல்ஸ்
என 15 பல்கலைக்கழகத்திற்கு பரவியுள்ளது. இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அமெரிக்கா அரசு காவல்துறைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் கொலம்பியா பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று வெவ்வேறு பல்கலையில் 60 மாணவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மொத்தமாக தற்போது வரை மாணவர்கள், பேராசிரியர்கள் என 550க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இருப்பினும் இந்த போராட்டம் குறித்து அமெரிக்கா வாய் திறக்கவில்லை. எனவே இந்த போராட்டம் பாரிசுக்கும், லண்டனுக்கும் பரவியிருக்கிறது. University College London பல்கலையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் நட்பு நாடுகளுக்கான நிதியுதவி குறித்த ஒதுக்கீட்டில் கையெழுத்திட்டிருந்தார். இதன் மூலம் உக்ரைன், இஸ்ரேல் என அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு 94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கப்படும். இதில் இஸ்ரேலுக்கு மட்டும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் தொகை உதவியாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது ரூ.1.2 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் பட்ஜெட்டை விட 2 மடங்கு அதிகம்.
இப்படி ராணுவ உதவியாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிக் கொண்டிருப்பதால்தான் பாலஸ்தீனம் மீதான போர் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவின் இந்த பாலிசிக்கு எதிராகவே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications