சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி அறிவிப்பு! பிளானை பக்காவாக முடிக்கும் எலான் மஸ்க்
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்க் விரைவில் ராக்கெட்டை அனுப்ப இருக்கிறார். இதில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் அங்கேயே சிக்கிக்கொண்டார். இதற்கு காரணம் அவர் சென்ற ராக்கெட்தான். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் இவர் சென்றார். இவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் பயணித்தார். இருவரும் 10 நாட்களில் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால், திட்டத்தின்படி எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக அவர்களால் 10 நாட்களில் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

காரணம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதுதான். ராக்கெட் பூமியில் பத்திரமாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு பயன்படும். இந்த ராக்கெட்டில் த்ரஸ்டரில்தான் பிரச்சனை ஏற்பட்டது. எனவே இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலரும் சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. நான் அதிபரானால், சுனிதாவை பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல, அதிபரான பின்னர் சுனிதாவை உடனடியாக மீட்க எலான் மஸ்க்குக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்தன.
இது குறித்து நாசா கூறுகையில், வரும் மார்ச் 12ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 ராக்கெட் விண்வெளிக்கு போகும். அது, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்டு கொண்டு வரும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்களான ஆன் மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவன விண்வெளி வீரர் டகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்யா) விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர். அவர்களை அங்கு இறக்கிவிட்டு, இந்த ராக்கெட் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோரை பூமிக்கு திரும்ப அழைத்து வரும்.
நாசா விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், "இது சாதாரண பஸ் பயணத்தை போன்றதுதான். ஒரு ஸ்டாப்பில் ஏறி அடுத்த ஸ்டாப்பில் இறங்குவோமே அப்படித்தான். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் அதிகம்" என்று கூறியுள்ளனர்.
சுனிதாவின் இந்த பயணம் இரண்டு விஷயங்களை விண்வெளி ஆய்வு உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. ஒன்று, விண்வெளிக்கு புறப்படும் ராக்கெட்டில் கோளாறு இருந்தால், விண்வெளி வீரர்கள் நீண்ட நாட்கள் வரை விண்வெளியில் கழிக்க வேண்டியது இருக்கும். அதேபோல, பல கட்ட சோதனைக்கு பிறகுதான் விண்வெளி வீரர்கள் செல்லும் ராக்கெட்டுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இந்த இரண்டு பாடத்தையும் நாசா நன்றாக கற்றுக்கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications