நூலிழையில் உயிர் தப்பிய சுனிதா வில்லியம்ஸ்.. விண்வெளியில் பெரும் ஆபத்து! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நியூயார்க்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ள நிலையில், விண்வெளி குப்பைகள் தாக்கும் ஆபத்தை அவர் எதிர்கொண்டிருக்கிறார். எனவே அவர் விரைவில் பூமிக்கு திரும்ப வேண்டும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி துறையில் சமீபத்தில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அதன்படி தனியார் நிறுவனங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. முதலில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் களமிறங்கி நாசா வீரர்களை விண்வெளிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் களமிறங்கியது.

போயிங் சார்பில் 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப் தயாரிக்கப்பட்டது. இது கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இதில் 58 வயதான சுனிதா வில்லியம்ஸூம், அவருடன் சக விண்வெளி வீரராக புட்ச் வில்மோரும் பயணித்தனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸ்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் கடந்த 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி அதாவது நேற்று இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்றும் இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜூலை 2ம் தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள் என போயிங் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மற்றொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். அதாவது, விண்வெளியில் சுற்றும் குப்பைகள் சர்வதேச விண்வெளி மையத்தை தாக்க நெருங்கியிருக்கிறது. இதனால், விண்வெளி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே இருந்து வந்த நபர்களுக்கு மட்டுமே பாதுகாப்பான இடம் இருக்கிறது.
புதிதாக வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு அப்படியான இடங்கள் இல்லை. ஏனெனில் இவர்களின் பயணம் வெறும் 7-8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயண நாட்களில் விண்வெளி குப்பை சர்வதேச விண்வெளி மையத்தை தாக்கும் அபாயம் எழுந்திருக்கவில்லை. ஆனால், சுனிதாவை அழைத்து சென்ற ஸ்டார் லைனர் பழுதாகியதால் இவர்களின் பயணம் 3 வாரங்களுக்கும் மேல் நீடித்து வருகிறது.
எனவே சுனிதாவும், வில்மோரும் ஸ்டார் லைனர் விண்கலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விண்வெளி குப்பைகள் கடந்து சென்றதையடுத்து அவர்கள் மீண்டும் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் நாட்களிலும் இதுபோன்ற அவசர நிலை எழலாம். எனவே உடனடியாக சுனிதாவையும், வில்மோரையும் பூமிக்கு அழைத்துவர வேண்டும் என சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications