விடுகதையா இந்த வாழ்க்கை! 1000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய பிரபல நிறுவனம் Cisco
நியூயார்க்: வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக.. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் லே ஆஃப் படலத்தை தொடர்ந்திருக்கின்றன. இந்த முறை அமெரிக்காவின் 'சிஸ்கோ இன்க்' எனப்படும் டெக் நிறுவனம் 1000 பணியாளர்களை வேலையை விட்டு துரத்தியிருக்கிறது. இந்நிறுவனம் இப்படி செய்வது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும்.
'சிஸ்கோ இன்க்' உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனம். ஒரு காலத்தில் கம்யூட்டர்களுக்கு தேவையான சிப்களை இன்டெல்தான் தயாரித்து கொடுத்து வந்தது. பின்னர் இன்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக என்விஐடிஐயே (NVIDIA) உள்ளே வந்தது. இப்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டியாக 'சிஸ்கோ இன்க்' இருக்கிறது. அந்த அளவுக்கு பெரிய டெக் ஜாம்பவான்தான் சிஸ்கோ.

நெட்வொர்க்கிங், சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சென்டர், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என, 'சிஸ்கோ இன்க்' டெக் துறையில் கால் பதிக்காத இடமே இல்லை.
ஆனால் இந்நிறுவனம் நுழையாத மற்றொரு துறை இருக்கிறது. அதுதான் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். உலகமே இப்போது இதை நோக்கிதான் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில், 'சிஸ்கோ இன்க்' இன்னும் இந்த துறையில் காலடி எடுத்து வைக்காமல் இருந்தது. இது நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி, ஏஐ இல்லாமல் முழமையடையாது என்கிற நிலை உருவானது.
எனவே தனது முதலீடுகளை ஏஐ நோக்கி திருப்பி விட்டிருக்கிறது 'சிஸ்கோ இன்க்'. ஏஐ ஸ்டார்அப்களுக்கு ரூ.8,250 கோடியை ஒதுக்கியுள்ளது. தவிர, Splunk எனும் டெக் நிறுவனத்தையும் ரூ.2.3 லட்சம் கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. எல்லாம் ஓகேதான், ஆனால் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை என்று அவர்களை வேலையை விட்டு துரத்தியிருப்பதுதான் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தில் மொத்தம் 85,000 பணியாளர்கள் இருந்தனர். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட லே ஆஃப் காரணமாக, இப்போது 27,000 பணியாளர்களின் வேலை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இதுவரை 9,600 பணியாளர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 1000 பேரை நீக்கியுள்ளது இந்நிறுவனம். ஏஐ துறையில் முதலீடு, சைபர் செக்கியூரிட்டியில் கூடுதல் கவனம் போன்றவை காரணமாக பணி நீக்கங்கள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே கூகுள், ஐபிஎம், இன்டெல் போன்ற பெரு நிறுவனங்களில் இந்த பணி நீக்கம் தொடர்ந்து வரும் நிலையில், 'சிஸ்கோ இன்க்' நிறுவனத்திலும் இது தொடர்வது டெக் பணியாளர்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பணி நீக்கங்கள் நடக்கும்போது, பணி நீக்கங்களை முடிந்த அளவுக்கு குறைத்து வருகிறோம் என்று பெரு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், லாபம் என்கிற விஷயம் வரும்போது பணி நீக்க விஷயத்தில், கார்ப்பரேட் எனும் வேதளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடுகிறது என்பதே நிதர்சனமானதாக இருக்கிறது என்று பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்












Click it and Unblock the Notifications