எரியும் நெருப்பில் எண்ணெய்.. பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியை நிறுத்தியது அமெரிக்கா! காசா மக்கள் தவிப்பு
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால், போர் பல்வேறு நாடுகளுக்கு நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்களை ஈரானின் ஹவுதி படைகள் தாக்குவதால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இருநாடுகளும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளது. எனவே மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இப்படி இருக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இஸ்ரேல் மீதான தாக்குதிலில் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேலில் 9 மாதங்கள் முதல் 80 வயது வரையிலான 3,000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவால் தாக்கப்பட்டனர். பல பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சுமார் 1,405 பேர் உயிரிழந்தனர், மேலும் 200 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான ஊழியர்கள் 12 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஐநா விரிவான விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து ஏற்கெனவே ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பாலஸ்தீனத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்ய நிதி அவசியமாக இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் ஐநாவுக்கான நிதி வெட்டை அமெரிக்கா அறிவித்திருப்பது திட்டமிட்ட பழிவாங்கும் செயல் என பாலஸ்தீனம் விமர்சித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications