அவர கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கப்பா.. நோபல் பரிசு தரலைனா அசிங்கமாயிடும்! அழாத குறையாக பேசிய டிரம்ப்
சென்னை: அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால் அது அமெரிக்காவுக்கே ஒரு "பெரிய அவமானமாக" இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பாக பேசியுள்ளார். இந்த மாதம் நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், டிரம்ப் தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஊடக வெளிச்சத்தை மட்டுமே கொண்ட நபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை தர முடியாது என நார்வே நோபல் கமிட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , "எனக்கு அந்த பரிசை தருவார்களா? இல்லை. ஒரு சிறிய காரியம்கூட செய்யாத ஒருவருக்குத்தான் அதை கொடுப்பார்கள் என நினைக்கிறேன்..
ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தரப்படாவிட்டால் அது எனக்கான அவமானம் இல்லை, நம் நாட்டுக்கான அவமானமாக இருக்கும். எனக்கு அந்த பரிசு தேவையில்லை, ஆனால் அமெரிக்காவுக்குத் தேவையாகும். ஏனெனில் நம் நாடு அதை பெற தகுதியானது," என்று தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப்
மேலும், "31 ஆண்டுகள் நீடித்த போர்களும் இருந்தன, 36 ஆண்டுகள் நீடித்த போர்களும் இருந்தன. அவை முடியாது என்று பலரும் கூறினர். ஆனால் நான் ஏழு பெரிய போர்களை முடிவுக்கு கொண்டுவந்தேன். முன்னதாக அந்த போர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். நான் வந்த பிறகு ஏழு போர்கள் நிறுத்தப்பட்டு, பல்லாயிரக்காண மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்காகவே நான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவன்," என்றும் வலியுறுத்தினார்.
நோபல் அமைதிப் பரிசு
2025ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜனவரியில் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து அவர் தன்னுடைய ஆட்சியில் ஆறு போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி வருகிறார். எனினும் காஸா மற்றும் உக்ரைனில் போர்கள் இன்னும் முடிவடையவில்லை. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் தன் தலையீட்டால்தான் சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை
" இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் நான் வர்த்தக அழுத்தத்தைப் பயன்படுத்தினேன். ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என்று சொன்னவுடன் அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்," என்று டிரம்ப் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் கனவுடன் இருந்தது இது முதல் முறை அல்ல. தனது முந்தைய ஆட்சி காலத்திலேயே தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்தும் அவர் அந்த விருதை பெற முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நோபல் கமிட்டி
இந்நிலையில், டிரம்பின் முயற்சி குறித்து நார்வே நோபல் கமிட்டி கடுமையான பதிலை அளித்துள்ளது. அதன் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகன், "ஊடகங்களின் வெளிச்சம் அல்லது பொதுமக்களின் அழுத்தம் எங்கள் முடிவுகளை பாதிக்காது. ஒவ்வொரு பரிந்துரையும் அதன் தனித்துவமான தகுதிகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்," என்று கூறியுள்ளார். இதனால், டிரம்ப் எத்தனை முறை தன்னைத் தானே "அமைதிக்கான வீரன்" என்று புகழ்ந்தாலும், நோபல் கமிட்டி தனது நிலைப்பாட்டை மாற்றும் வாய்ப்பு இல்லை என்பதைக் குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள முடிவில் டிரம்ப் பெயர் இடம்பெறுமா அல்லது ஏமாற்றமே மிஞ்சுமா என்பதே இப்போது உலக அரசியல் வட்டாரங்கள் கவனித்து வரும் முக்கிய கேள்வியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications