உக்ரைனுக்கு குழி வெட்டும் ட்ரம்ப்! ரஷ்யா மீது அனுதாபமா? இந்தியாவுக்கு பாசிட்டிவ் சிக்னல்!
நியூயார்க்: உக்ரைன்-ரஷ்யா போருக்கு நேட்டோதான் (NATO) காரணம். இதை குறிப்பிட்டு பேசியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் முட்டல் மோதல்கள் இருந்துக்கொண்டுதான் இருந்தன. ஆனால் 2021ம் ஆண்டு இது உச்சத்தை தொட்டது. போர் காரணமாக இந்தியாவுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. தற்போது ட்ரம்ப் பேசியிருக்கும் டோன்.. போரை நிறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி நடந்தால் இந்தியாவுக்கு நன்மைகள் அதிகம்.

ட்ரம்ப் பேசியது என்ன?:
புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோவில், செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், "உக்ரைனை நேட்டோவில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை பைடன் நடத்தியிருந்தார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விதமே மிக மோசமானதாக இருந்தது. இது போரில்தான் போய் முடியும் என்று கூறியிருந்தேன். நான் சொன்னது இப்போது நிஜமாகியிருக்கிறது.
ரொம்ப நாளாக நேட்டோவில் உக்ரைன் சேருவதை ரஷ்யா விரும்பவில்லை. அப்படி சேர்ந்தால் ரஷ்யர்களின் வீட்டு வாசலில் நேட்டோ படை வந்து நிற்கும் என்கிற அச்சம் நியாயமானதுதான். அவர்களின் உணர்வை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது" என்று ட்ரம்ப் பேசியுள்ளார். இந்த பேச்சு, உக்ரைனுக்கு எதிராக இருப்பதாகவும். அப்படி நடந்தால் இந்தியாவுக்குதான் லாபம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு என்ன லாபம்?:
கச்சா எண்ணெய்தான் இந்தியாவுக்கு லாபம். அரபு நாடுகளிடம் எண்ணெய் வாங்கினால் அவர்கள் அமெரிக்க டாலரில் பணம் கேட்கிறார்கள். ஆனால் நம்மாளு புதின் அப்படி இல்ல. இந்தியன் கரன்சியை கொடுங்க, அள்ளிட்டு போங்க என்று கச்சா எண்ணெய்யை வாரி வாரி வழங்கி வந்திருந்தார். ஆனால் உக்ரைன் உடன் போர் தீவிரமானதால் எண்ணெய் சப்ளை குறைய ஆரம்பித்தது.
ரஷ்யாவிடமிருந்து இந்திய ஆயில் நிறுவனங்களான 'இந்தியன் ஆயில்', 'பாரத் பெட்ரோலியம்' மற்றும் 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகியவை கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. ஆனால் இந்த ஜனவரி மாதம் இந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 8-10 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் பற்றாக்குறையாக இருந்தது. இவ்வளவு எண்ணெய்யை ரஷ்யா வழங்கவில்லை. எனவே அரபு நாடுகளை நாட மீண்டும் இந்தியா நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால் ட்ரம்பின் பேச்சு போரை நிறுத்தும் என்று எதிர் பார்க்கப்படுவதால், மீண்டும் ரஷ்யா-இந்தியா எண்ணெய் சப்ளை சீராக வாய்ப்பு இருக்கிறது.
போர் நிற்குமா?:
என்னதான் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு சப்போர்ட்டாக பேசியிருந்தாலும், உக்ரைன் போரை நிறுத்த அவர் ஒப்புக்கொள்வாரா? என்று கேட்டால் அதில் பெரிய சந்தேகம் இருக்கிறது. அமெரிக்க அதிபர்களில் வடகொரியா அதிபர் கிம் ஜான் உன்-ஐ முதல் முதலில் சந்தித்தது ட்ரம்ப்தான். அதேபோல புதினிடமும் நல்ல உறவை ட்ரம்ப் வளர்த்து வந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்களை ட்ரம்ப் நிறுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா இந்தியா உறவு:
இந்தியாவுக்கு எண்ணெய் மட்டுமல்லாது பல்வேறு விஷயங்களில் ரஷ்யா நட்பு கரம் நீட்டியிருக்கிறது. ராணுவ ஆயுதங்களை எடுத்துக்கொண்டால், பெரும்பாலானவை ரஷ்யா கொடுத்ததுதான். உலகையே மிரட்டும் S-400 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியாவுக்கு ரஷ்யா கொடுத்திருக்கிறது. மட்டுமல்லாது நமது விமானப்படையில் ரஷ்யாவின் மிக், சுக்கோய் உள்ளிட்ட விமானங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் இந்தியா-ரஷ்யாவின் உறவை இன்றும் பிரதிபலித்து வருகிறது.












Click it and Unblock the Notifications