பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. போரை நிறுத்துங்கள்.. அமெரிக்க படை வீரர் தீக்குளிப்பு
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது, அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில், பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சுதந்திரமான பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும் அமெரிக்காவின் விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே இந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, வழக்கம்போல பணிக்கு வந்த விமானப்படை வீரர், தூதரகத்தின் வாசலுக்கு வந்து,
தீக்குளிப்பு: “இனிமேலும் நான் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்” என்று கூறி தனது உடலில் தீயை வைத்துக்கொண்டார். தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில், “பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்” என்று தொடர்ந்து முழக்கமிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின்போது உடன் பணியாற்றிய சில அதிகாரிகள், தீயை அணைத்துள்ளனர்.
யார் இவர்?: இது குறித்து புலனாய்வு விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, தற்கொலைக்கு முயன்ற நபர் அமெரிக்கா விமானப்படையில் பணியாற்றி வரும் வீரர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரது பெயர் ஆரோன் புஷ்னெல். இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் இருந்து வந்திருக்கிறார். தகவல் தொழில்நுட்ப பிரிவில், கிளையன்ட் சிஸ்டம்ஸ் டெக்னீஷியனாகவும், DevOps இன்ஜினியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் சதர்ன் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் பயின்றிருக்கிறார்.
தீ அணைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆரோன், தீவிர சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?: பாலஸ்தீனத்தில் தொடக்கத்தில் அகதிகளாக குடியேறிய யூதர்கள், பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க தொடங்கினர். பாலஸ்தீனத்திற்குள் உருவான இஸ்ரேல் மெல்ல மெல்ல வளர்ந்து முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுக்க, பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின. இதில் ஒன்றுதான் ஹமாஸ்.
கடந்த 2005ம் ஆண்டு காசா முனை பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் அங்கிருந்து விலகிக்கொண்டது. இதனையடுத்து காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது. அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு தீவிரமடைந்தது.












Click it and Unblock the Notifications