ஆப்கன் நபரை வைத்து.. ட்ரம்பை கொல்ல ஈரான் சதி! அமெரிக்கா சரமாரியாக குற்றச்சாட்டு
நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அவரை கொல்ல ஆப்கான் நாட்டவரை வைத்து ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆப்கன் நபரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கும்-ஈரானுக்கும் நேரடி மோதலை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து அவர் மீதான கொலை முயற்சி தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் உச்சமாக, பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பார்க்கப்பட்டது. தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென காதை உரசிக்கொண்டு துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்து சென்றிருக்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட ட்ரம்ப், கீழே படுத்துவிட்டார். பக்கத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சூழ்ந்துக்கொண்டு, பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இந்த தாக்குதலில் ட்ரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. காயம் தொடர்பாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தன. குறிப்பாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருக்கும் அமெரிக்காவில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது எப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? அந்த அளவுக்கு பாதுகாப்பு விஷயத்தில் போலீசும், சீக்ரெட் சர்வீஸும் கவனக்குறைவாக இருந்ததா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகு ட்ரம்ப் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. சந்தேக நபர்கள் யார் இருந்தாலும், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இப்படி இருக்கையைில் தேர்தல் நடந்து முடிந்து, ட்ரம்ப் புதிய அதிபராக விரைவில் பதவியேற்க இருக்கிறார். இந்த நேரத்தில் ட்ரம்பை கொல்ல ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை வைத்து ஈரான் திட்டம் போட்டிருப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியிருக்கிறது.
சமீபத்தில் அமெரிக்க போலீசார் 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரியை கைது செய்தனர். இவர் ஆப்கன் நாட்டை சேர்ந்தவர். இவர் மூலமாகதான் ட்ரம்பை கொல்ல ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே அமெரிக்காவில் ஈரான் எதிர்ப்பு பத்திரிகையாளர் ஒருவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ட்ரம்புக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு ட்ரம்பை கொல்வதை விட, தேர்தலுக்கு பின்னர் அவரை கொல்வது எளிது என ஈரான் அரசு தன்னிடம் கூறியதாக ஃபர்ஹாத் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்துவிடுவார் என்றும், அவருக்கான பாதுகாப்பு குறைந்துவிடும் என்றும் ஈரான் கணக்கிட்டிருந்தது என்று ஃபர்ஹாத் கூறியதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது நேரடியாகவே ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications