ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பலன் இல்லை- அவசர அங்கீகாரத்தை திரும்ப பெற்றது யு.எஸ். மருந்து நிர்வாகம்
நியூயார்க்: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பலன் இல்லை என்பதால் இதற்கு தரப்பட்ட அவசர அங்கீகாரத்தை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் திரும்பப் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் கடந்த 2 மாதங்களாக உலகின் மருத்துவ துறையில் முதன்மை பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த மருந்தை ஏற்றுமதி செய்யாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கான தடையை உடனே மத்திய அரசு நீக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது. மலேரியாவை கட்டுப்படுத்தக் கூடிய இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது என்பது பொதுநம்பிக்கை.
இதனை மையமாக வைத்தே பிரதமர் மோடி, இந்தியாதான் உலக நாடுகளையே காப்பாற்றி வருகிறது என்கிற பொருளில் பேசியிருந்தார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாகவும் போற்றப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் போதுமான பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் இதற்கு அளிக்கப்பட்ட அவசர அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதாக அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகமான (The Food and Drug Administration) முடிவு செய்திருக்கிறது என்பதுதான் அந்த செய்தி. அமெரிக்காவில் இந்த மருந்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் The Food and Drug Administration அமைப்பு இம்முடிவை எடுத்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications