சொப்பனத்திலும் கண்டில்ல சாரே.. சோத்துக்கே அல்லாடும் அமெரிக்கர்கள்! டிரம்ப் மனசு வைச்சா தப்பிக்கலாம்!
நியூயார்க்: அமெரிக்காவில் அரசு முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டது மூன்று வாரங்களைத் தாண்டியுள்ள நிலையில், பல துறைகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில், ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) எனப்படும் உணவு உதவித் திட்டம் அரசு நிதியின்றி நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட சுமார் 4.2 கோடி அமெரிக்கர்கள் பசியால் வாடப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'ஃபுட் ஸ்டாம்ப்ஸ்' எனப்படும்அமெரிக்க அரசின் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program - SNAP) மூலம், பொருளாதார ரீதியாக பலவீனமான மக்கள் மாதந்தோறும் உணவுப் பொருட்களை இலவசமாக பெற்று வருகின்றனர்.
ஒரு தனிநபருக்கு மாதம் சுமார் 190 டாலர் மதிப்பில், ஒரு குடும்பத்திற்கு 356 டாலர் மதிப்பில் உணவு உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால், ரொட்டி போன்றவற்றை வாங்க முடியும். ஆனால், இதனைப் பயன்படுத்தி மதுபானம் போன்ற உணவு அல்லாத பொருட்களை வாங்க முடியாது.

அமெரிக்க அரசு முடக்கம்
இந்நிலையில், அமெரிக்க அரசின் நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ல் முடிகிறது. அடுத்த நிதியாண்டுக்கான செலவுத் திட்டம் அக்.1ம் தேதி தொடங்கும். அந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்தது 60% உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு, ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் பல்வேறு கொள்கை விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளால் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை.
உணவு உதவி திட்டம்
குறிப்பாக, முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டு திட்டமான 'ஒபாமா கேர்' குறித்து கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அரசு நிதி மசோதா நிறைவேறாமல் போனது. அதன் விளைவாக, அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு பல துறைகள் முடங்கியுள்ளன. இப்போது அதே முடக்கம், உணவு உதவித் திட்டத்தையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, வேளாண் துறை மாகாண SNAP அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, இந்த மாத இறுதிக்குள் நிதி தீர்ந்துவிடும் என்று எச்சரித்துள்ளது. இதனால், பல மாநிலங்களில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பசியால் வாடும் அமெரிக்கர்கள்
இதற்கிடையில், அமெரிக்க வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் தனது எக்ஸ் பதிவில், "ஜனநாயகக் கட்சி அந்நியர்களுக்கான மருத்துவத் திட்டத்துக்காக, அமெரிக்கர்களின் உணவுத் திட்டத்தை ஆபத்தில் இட்டுவிட்டது. இது மிகப் பெரிய தவறு" என்று ஜனநாயகக் கட்சியை குற்றம்சாட்டினார். மாறாக, கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூஸம், "அரசு நிதியிலிருந்து 80 மில்லியன் டாலர் ஒதுக்கி, உணவு வங்கிகளைச் செயல்பாட்டில் வைத்திருக்க முயல்கிறோம்" என்று அறிவித்தார்.
நிதி நெருக்கடி
வீடுகளில் உணவுப் பொருட்களின்றி வெறும் அலமாரிகளும், உணவில்லாமல் வெறும் வயிறுகளும் வாஷிங்டனின் அரசியல் பிழையின் விளைவு எனக் விஸ்கான்சின் ஆளுநர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், ட்ரம்ப் அரசு நினைத்தால் அவசர நிதியை விடுவித்து குறைந்தது சில வாரங்களுக்கு திட்டத்தை நடத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதுவும் தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். அரசு முடக்கம் நீடித்தால், நவம்பர் 1 முதல் பெரும்பாலான மாநிலங்களில் இந்த உணவு உதவித் திட்டம் நிறுத்தப்படும் வாய்ப்பு மிக அதிகம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குளிர்காலம், தேங்க்ஸ் கிவிங், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் நெருங்கிவரும் நிலையில், இந்த உதவி நிறுத்தப்பட்டால் ஏழை குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications