இஸ்லாமாபாத்தில் இனிப்பு பேச்சு.. ஹார்முஸ் ஜலசந்தியில் சத்தமே இல்லாமல் சம்பவம்.. ட்ரம்ப் அதிரடி
நியூயார்க்: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை அடைத்து வைத்திருப்பது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. அந்தப் பாதையைத் திறக்கச் சொல்லி ஈரான் போடும் நிபந்தனைகளுக்கு அடிபணிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுத்தமாக விரும்பவில்லை. அதனால் தான், "நீ வழியைத் திறந்தால் நான் தடையை நீக்குகிறேன்" என்று கெஞ்சுவதற்குப் பதிலாக, "வழியை நானே திறந்துட்டேன், இப்போ வந்து பேசு என்று ஹார்முஸ் ஜலசந்தியில் செய்திருக்கிறார். பாகிஸ்தானில் பேசிக்கொண்டிருக்கும் அதேநேரம் ராணுவ நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் தனது செல்வாக்கை நிலைநாட்ட விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் தான் ஒரு ஸ்டிராங்க் லீடர் என்று காட்டிக்கொள்ளவே எப்போதும் விரும்புகிறார்.எனவே கடுமையான தலைவலி தந்து வரும் ஈரானும் அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தினால் அவர் பலவீனமானவர் என்று விமர்சனம் வரும் என்பதால், அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியில் ராணுவ நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தை
கத்தியை மேசைக்கு அடியில் வைத்துக்கொண்டு, மேசைக்கு மேலே கைகுலுக்குவது என்று நம்மூரில் சொல்வார்களே.. அப்படியான ஒரு பேச்சுவார்த்தை தான் அமெரிக்கா ஈரானிடம் நடத்துகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மும்முனைப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வளைகுடா பகுதியில் கன்னிவெடி அடங்கிய கப்பல்களை காலி செய்திருக்கிறார்.
டிரம்ப் ஆவேசம்
ஹார்முஸ் ஜலசந்தியை சீரமைக்கும் பணியை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளதாகவும், அங்கு கண்ணிவெடிகளை விரித்து வைத்திருந்த ஈரானின் அனைத்துக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்ரம்ப் கூறுகையில், "நாங்கள் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டோம். உலகின் மிகச்சிறந்த மற்றும் 'இனிமையான' ண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொள்வதற்காக, எண்ணெய் டேங்கர் கப்பல்கள் இப்போது அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன," என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மாற்று திட்டம்
ஈரான் போரின் காரணமாக, உலக எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்திருந்தது. இதனால் உலகளவில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டது. இது பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு ஒரு வலுவான ஆயுதமாக இருந்து வந்தது. இதனால் ஈரானின் இந்த பிடிவாதத்தை உடைக்க, அமெரிக்காவே உலகிற்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்கும் மாற்றாக இருக்கும் என்று ட்ரம்ப் வாதிட்டு வருகிறார்.
ஈரானின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்
தெளிவாக சொல்வது என்றால், ஈரான் அடைத்து வைத்திருந்த கடல் வழியை அமெரிக்கா ராணுவ பலத்தால் திறந்துவிட்டது. இனி ஈரானை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை, அமெரிக்காவே உலகிற்கு எண்ணெய் வழங்கும்" என்று ட்ரம்ப் சவால் விடுத்துள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள ஈரானின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது தான் உலக நாடுகளுக்கு உள்ள ஒரே பயம்.. ஏற்கனவே இந்தியா, இலங்கை , பாகிஸ்தான் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் மற்றும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. விலையும் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களை பாதித்துள்ள இந்த போர் எப்போது முடிந்து இயல்பு நிலை திரும்பும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications