ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் தற்காலிக போர் நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், புதிய வான்வழித் தாக்குதல் ஒன்று அரங்கேறியுள்ளது. இது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில், அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கடந்த 48 மணி நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஒருபுறம் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

US Iran

அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM) இந்தத் தாக்குதலை "தற்காப்பு நடவடிக்கை" என்று விளக்கியுள்ளது. பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு மையம் ஒன்றிலிருந்து அமெரிக்கப் படைகளை நோக்கி ட்ரோன் ஏவப்படத் தயாராக இருந்ததாகவும், அதை முறியடிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் ஈரான் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்தத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல் படையைச் (IRGC) சேர்ந்த நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டிரம்ப் எச்சரிக்கை

இந்தத் தாக்குதலுக்கு மத்தியிலும், வெள்ளை மாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். "ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மிகவும் விரும்புகிறது. ஆனால் அவர்கள் இன்னும் போதிய நிபந்தனைகளை முன்வைக்கவில்லை. நமக்கு திருப்தி இல்லை. ஒன்று அவர்கள் ஒப்பந்தத்துக்கு வர வேண்டும், இல்லையெனில் நாங்கள் தொடங்கிய வேலையை முழுமையாக முடிப்போம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிடாவிட்டாலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாகத் திறந்துவிடாவிட்டாலோ மீண்டும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்பதை டிரம்ப் தெளிவாக உணர்த்தினார்.

தோஹா அமைதிப் பேச்சுவார்த்தை

இதேவேளையில் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் இரு நாட்டு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.

பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன:

1. ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறப்பது
2. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழித்தல் அல்லது சர்வதேசக் கண்காணிப்புக்கு ஒப்படைத்தல்
3. அமெரிக்காவால் முடக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை விடுவித்தல்

ஈரானிய வெளியுறவு அமைச்சகம் "அமைதி ஒப்பந்தத்துக்கு மிக அருகிலும், அதேசமயம் மிகத் தூரத்திலும் இருக்கிறோம்" என்று கூறியுள்ளது.

உலகின் மிக முக்கியமான எரிபொருள் போக்குவரத்து வழியான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால் ஏற்கனவே பதற்றத்தில் உள்ள உலகப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படலாம்.

இந்த அடுத்தடுத்த தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுமா அல்லது மீண்டும் முழுமையான போர் மூளுமா என்பது தோஹா பேச்சுவார்த்தையின் இறுதி முடிவைப் பொறுத்தே அமையும். தற்போதைய நிலவரம் மிகவும் பதற்றமானதாகவே தொடர்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+