செம குட்டு.. அருணாச்சலம் இந்தியாவுடையது.. சீனாவுக்கு அமெரிக்கா தந்த "நோஸ்கட்".. தீர்மானமே போட்டாச்சு
ஏற்கெனவே தைவான் விவகாரத்தில் அமெரிக்கா எங்களை எதிர்த்த நிலையில், தற்போது இந்தியா விவகாரத்தில் மூக்கை நுழைத்து தேவையில்லாமல் எங்களை எதிர்த்து வருவதாக சீனா விமர்சித்துள்ளது.
நியூயார்க்: அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் சீனாவுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தையொட்டிய இந்திய சீனா எல்லைப் பகுதியான தவாங் செக்டாரில் இரு நாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே இந்த பகுதியில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கி வந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் சீனா இதனை காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க செனட் அவையில் அந்நாட்டின் சுதந்திர மற்றும் ஜனநாயக கட்சியினர் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். செனட்டர் ஜெஃப் மெர்க்லி(ஜனநாயக கட்சி) மற்றும் பில் ஹாகெர்டி (சுதந்திர கட்சி) ஆகியோர் இணைந்து நேற்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். அதில், "இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சலப் பிரதேசம் இருப்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது.

கண்டனம்
அதேபோல எல்ஏசி (LAC) பகுதியில் உள்ள நிலைமையை மாற்ற ராணுவத்தை பயன்படுத்தியதற்காக சீனாவை அமெரிக்கா கண்டிக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ள இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "இந்தியாவின் பாதுகாப்பு நவீனமயமாக்கலையும், எல்லை உட்கட்டமைப்பை மேம்படுத்த அருணாச்சலத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறோம். இந்த பகுதியில் அமைதியை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அதேபோல ஒரே எண்ணம் கொண்ட நேச நாடுகளையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது.

ஆதரவு
இந்த தீர்மானம் அருணாச்சலப் பிரதேசத்தை மீண்டும் இந்தியாவின் பகுதியாக மாற்றுவதை வலியுறுத்துகிறது. மட்டுமல்லாது தெற்காசியாவில் சீனாவின் அத்துமீறலையும் கண்டிக்கிறது" என்று கூறுகிறது. இந்த தீர்மானம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், இந்தியாவுக்கான அமெரிக்காவின் ஆதரவு நிலைப்பாட்டை இத்தீர்மானம் வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்னரும் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சீனாவை கண்டித்திருக்கிறது. ஆனால், இவ்வளவு விரிவாக தீரமானம் நிறைவேற்றியதில்லை. கடந்த சில நாட்களாக சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை தென் திபெத் என்று அழைத்து வந்த நிலையில், இந்நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா தற்போது தீர்மானம் இயற்றியுள்ளது.

முக்கை நுழைக்க வேண்டாம்
ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் உரசல்கள் நீடித்து வரும் நிலையில், இதனை இந்தியாவுக்கும் சீனாவுக்குமானதாக மாற்ற அமெரிக்க முயன்று வருவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்தோ பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே தைவான் விவகாரத்தில் அமெரிக்கா எங்களை எதிர்த்த நிலையில், தற்போது இந்தியா விவகாரத்தில் மூக்கை நுழைத்து தேவையில்லாமல் எங்களை எதிர்த்து வருவதாக சீனா விமர்சித்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கு மோதலையடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உரசல்கள் உச்சமடைந்துள்ளன.

அதிருப்தி
இந்த மோதலை அமெரிக்க கவனமாக உற்றுநோக்கி வருகிறது. சீனாவின் ஆய்வு கப்பல் ஒன்று அடிக்கடி இலங்கைக்கு வந்து சென்றுக்கொண்டிருக்கையில், இந்தியாவும் பாதுகாப்பு விஷயத்தில் அதிருப்தியடைந்துள்ளது. இதற்கிடையில் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications