அமெரிக்காவுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடமா? ஒன்று கூடி முழக்கமிட்ட மக்கள்! கையை பிசையும் அதிகாரிகள்
நியூயார்க்: இஸ்ரேலுக்கும் - ஹமாஸ் படைக்கும் இடையே 10வது நாளாக மோதல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேலால் காலங்காலமாக ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. ஆனால் அகதிகளாக வந்த யூதர்களோ இந்த குரல்களை நசுக்கி இஸ்ரேல் எனும் நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றனர். இதன் விளைவு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவாகி அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதுதான் சாக்கு என இஸ்ரேலும், மேற்கு நாடுகளும் இந்த அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அதன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாகதான் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 7ம் தேதியன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்', இஸ்ரேல் மீது மிக கடுமையான பயங்காரவாத தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணை ஏவியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 10வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் இந்த போராட்டம் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. காசாவை ஆக்கிரமிக்க கூடாது, அதேநேரம் ஹமாஸை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு. இப்படி இருக்கையில் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டிருப்பது அமெரிக்காவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல கனடா, பாகிஸ்தான், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
மறுபுறம் இந்தியாவை பொறுத்த அளவில் டெல்லியில் மக்கள் இஸ்ரேல் கொடிகளை கைகளில் ஏந்தி அந்நாட்டிற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பிரிட்டன் தலைநகர் லண்டன், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ ஆகிய இடங்களிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பியுள்ளனர். லண்டனில் 1000 பேர் ஒன்று கூடி, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இஸ்ரேலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications