கயிற்றில் இருந்து நழுவிய கை.. அந்தரத்தில் தொங்கிய பெண்.. விநோத வீடியோவால் குழம்பிய நெட்டிசன்கள்!
நியூயார்க்: ஊஞ்சல் கயிற்றில் இருந்து நழுவி தண்ணீரில் விழும் பெண் ஒருவர், நடுவே அந்தரத்தில் சில நொடிகள் தொங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
லட்சக் கணக்கான விநோத வீடியோக்களால் நிரம்பி வழிகின்றன சமூகவலைதளங்கள். அதில் பல வீடியோக்கள் தினமும் வைரலாகி விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் இதுவும்.
மைகா ஷா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இரண்டு பெண்கள் நீச்சல் உடை அணிந்தபடி ஒரு மரக்கட்டையின் மேல் நிற்கின்றனர். கீழே சிறு ஓடை ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு அருகில் உள்ள மரத்தில் ஊஞ்சல் போல் கயிறு கட்டப்பட்டுள்ளது.
இஎம்ஐ கட்ட சொல்லி வங்கிகள் நெருக்கடி.. வீதியில் இறங்கி பெண்கள் போராட்டம்
கை நழுவி கீழே விழும் பெண்
இரண்டு பெண்களில் ஒருவர் அந்த ஊஞ்சல் கயிற்றில் தொங்கியபடி ஓடை நீரில் குதிக்க முயல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிற்றில் இருந்து கை நழுவி கீழே இருக்கும் தண்ணீரில் விழுகிறார்.
விநோத சம்பவம்
இதில் விநோதம் என்னவென்றால், கை நழுவியதும் அந்த பெண் நேரடியாக தண்ணீரில் விழவில்லை. சில நொடிகள் அந்தரத்தில் தொங்கிய பிறகு தான் அவர் தண்ணீரில் விழுகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஆச்சரியம் தாங்க முடியாமல், அந்த பெண் எப்படி அந்தரத்தில் தொங்குகிறார் என ஆராயத் தொடங்கிவிட்டனர்.
ஆராய்ச்சி முடிவுகள்
இதனால் இந்த வீடியோ சுமார் 3 லட்சம் பார்வைகளை பெற்று வைரலாகிவிட்டது. "ஊஞ்சலுடன் கட்டப்பட்டிருக்கும் மற்றொரு மெல்லிய கயிறு அந்த பெண் விழும் போது அவரது உடலில் சுற்றிக்கொள்கிறது. எனவே தான் அவர் சில நொடிகள் அந்தரத்தில் தொங்கி, பின்னர் தண்ணீரில் விழுகிறார்", என்பது போன்ற ஆராய்ச்சி முடிவுகளால் கமெண்ட் பாக்ஸ் நிரம்பி வழிகிறது.
உங்கள் கருத்து என்ன?
ஆனால் யாராலும் இது தான் காரணம் என உறுதியாகக் கூற முடியவில்லை. இது ஏதேனும் கேமரா டிரிக்ஸ் அல்லது கிராபிக்ஸ் வேலையாக இருக்குமோ என்றுகூட சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். சரி இந்த வீடியோ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி கீழே உள்ள கமெண்ட்ஸ் செக்சனில் பதிவிடுங்கள்.