அடுத்தடுத்த 4 சம்பவங்கள்.. நெருங்கிய நட்பாக மாறிய பாகிஸ்தான் - அமெரிக்கா.. இந்தியா சுதாரிக்கணும்!
சென்னை: இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவுடன் நெருக்கமாக வேண்டிய.. அல்லது அமெரிக்காவில் உறவில் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டு உள்ளது. இதற்குப்பின் 4 முக்கியமான சம்பவங்கள் காரணமாக உள்ளன.
அமெரிக்கா - இந்தியா உறவு : சம்பவம் 1
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியசத்தை இந்தியா விரும்பாது என்ற போதிலும் தொடர்ந்து டிரம்ப் அதை பற்றியே பேசி வருகிறார். பலமுறை இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை தான் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என்று கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தற்போது மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடந்த சண்டையின் போது, போர் நிறுத்தத்தை மேற்கொள்ள உதவியது தான்தான் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த வெளிநாட்டு உதவியும் நாங்கள் பெறவில்லை என்று இந்தியா அப்போது தெளிவாக தெரிவித்திருந்தது.
அமெரிக்கா - இந்தியா உறவு : சம்பவம் 2
தற்போது டிரம்ப், பாகிஸ்தான் தலைவர்களைப் புகழ்ந்து பேச தொடங்கி உள்ளார். அதோடு இந்த பெரிய போரை தடுத்ததற்கான அமெரிக்காவின் பங்கை இந்தியா மதிக்கவில்லை என்றும் டிரம்ப் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் பேசும்போது, "பாகிஸ்தானில் நல்ல தலைவர்கள் உள்ளனர். இதை நான் சொல்வது சிலருக்கு பிடிக்காது, ஆனால் அதுதான் உண்மை. பாகிஸ்தான் தலைவர்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. நான்தான் போரை நிறுத்தினேன்.. ஆனால் யாரும் எனக்கு பாராட்டுத் தெரிவிக்கவில்லை. இந்த பெரிய போரை தடுத்ததற்கான அமெரிக்காவின் பங்கை இந்தியா மதிக்கவில்லை," என்றார்.
முன்னதாக டிரம்ப் இதே விவகாரம் தொடர்பாக பேசுகையில், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.
சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்துவிட்டார்கள், என்று கூறி இருந்தார்.
அமெரிக்கா - இந்தியா உறவு : சம்பவம் 3
அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டி பேசியுள்ளார். பாகிஸ்தான் தீவிரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.-கோரசானுக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தானுடனான உறவை துண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. இரு நாடுகளுடனான உறவுகளின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு அணுக வேண்டும். இரண்டு நாட்களுக்கு இடையிலான மோதலை.. இரண்டு துருவங்கள் போல பார்க்கக் கூடாது. இந்தியா - பாகிஸ்தான் இரண்டு துருவங்கள் கிடையாது.
இதை நினைவில் கொள்ள வேண்டும். அதோடு பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது, என்று கூறி உள்ளார். ஜெனரல் குரில்லா, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீரை வெகுவாகப் பாராட்டினார். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்-கோரசான் குழு, அமெரிக்காவிற்குள் தாக்குதல் நடத்த முயலும் தீவிரவாதக் குழுக்களில் மிகவும் ஆபத்தான குழுவாக உள்ளது. இதை வளர விடாமல் தடுக்க பாகிஸ்தான் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா - இந்தியா உறவு : சம்பவம் 4
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிர் ஜூன் 14-ம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின்போது, அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகன் அதிகாரிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனிர், அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளார். வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் முனிர் கலந்து கொள்வதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. ஜூன் 14 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 79-வது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், முனிரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகன் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இருப்பினும், இந்த உயர்மட்ட ராணுவ சந்திப்பு குறித்து பாகிஸ்தானோ அல்லது அமெரிக்காவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்தியா சுதாரிக்க வேண்டும்
அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம் ஆகி உள்ளதால்.. இந்தியா உடனே சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவுடன் நெருக்கமாக வேண்டிய.. அல்லது அமெரிக்காவில் உறவில் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications