ஊட்டியில் சூப்பர் சான்ஸ்.. நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு நாளை தமிழக அரசு தரும் மிகப்பெரிய வாய்ப்பு
ஊட்டி: புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது. புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய நீலகிரி மாவட்டதைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் நாளை ஊட்டியில் நடக்கிறது ஊட்டி, சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை கூட்டரங்கத்தில் நடக்கிறது.
படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லாருக்குமே சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், ஏக்கமும் இருக்கும். அதற்கு சரியான திட்டமிடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். ஏனெனில் பலருக்கும் பணம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். பணத்தை கடனாக வாங்க வேண்டும் என்றால், அதற்கு வங்கிகளை அணுக வேண்டும்.

வங்கிகளில் அரசு மானியத்துடன் கடன் உதவி பெற வழிகள் உள்ளது. இந்த கடன் உதவி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், விதவைகள், ஊனமுற்றோர், பெண்கள், ஏற்கனவே தொழில் செய்யும் தொழில் முனைவோர் எனபலரும் எளிதாக பெற முடியும். ஒவ்வொருவருக்கும் அரசு பல்வேறு சலுகைகளை அள்ளி தருகிறது. இதில் பலருக்கு கடன் உதவி மட்டுமின்றி பயிற்சியும் சேர்த்தே அரசு தருகிறது.
அந்த வகையில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக அடிக்கடி முகாம்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது.இந்த முகாம்களில் கலந்து கொண்டு புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்கள் கடன் பெறலாம்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும், மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் ஊட்டி, சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை கூட்டரங்கத்தில், நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று தேயிலை தூள் தயாரித்தல், சாக்லெட், வர்க்கி தயாரித்தல், கேரட் கழுவும் எந்திரம், கான்கிரீட் கலவை எந்திரம், பொறியியல் எந்திரங்கள், ஆட்டோ மொபைல் பணிமணை, வீல் அலைன்மெண்ட் மையம் அமைத்தல், மளிகை கடை, பெட்டி கடை, பலகாரக் கடை மற்றும் பேன்சி கடை போன்ற தொழில் தொடங்கலாம்.
அத்துடன் இந்த முகாமில், வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாமில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட இருக்கிறது. எனவே தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் நாளை (செப்டம்பர் 25) இந்த முகாமில் கலந்து கொண்டு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று நீலகிரி மாவட்ட அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications