ஊட்டி பெண் இறந்த வழக்கில் திருமணமான மறுநாளே கைதான போலீஸ்காரர்.. எடுத்த விபரீத முடிவு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சூரில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அணிக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மனைவி சசிகலாவுக்கு 26 வயது ஆகிறது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். தம்பதியினர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

கணவன்-மனைவி 2 பேரும் குடும்ப தகராறு காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சசிகலா அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.. இந்த நிலையில் சசிகலாவுக்கும், மஞ்சூர் அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவரும், ஊட்டியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்த 25 வயதாகும் கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து காவலர் கண்ணன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சசிகலா வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனிடையே கடந்த நவம்பர் 23-ந் தேதி கண்ணனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இதை அறிந்த சசிகலா அதிர்ச்சி அடைந்தார். கண்ணன் திருமணத்திற்கு முன்னர் நவம்பர் 21-ந் தேதிவிஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் அதற்குள் கண்ணன் திருமணம் திட்டமிட்டபடி நடந்து முடிந்து விட்டது.
போலீசார், சசிகலாவின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் கண்ணனும் சசிகலாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் ஏராளமாக இருந்துள்ளது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமணமான அடுத்த நாள் 24-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார்கள்..
இளம்பெண் இறந்த வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கண்ணனின் மனைவியும் அவரை பிரிந்து சென்று விட்டார். இதனிடையே மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்து விடலாம் என்று கண்ணன் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த கண்ணன் சிறையில் இருந்து வெளியே வந்ததும், கடந்த ஞாயிறு அன்று இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கண்ணன் இறந்து போனார். இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications