தூங்காமல் தவித்த ஊட்டி.. முப்படை தளபதி மரணம்.. நாளை ஒருநாள் முழு கடையடைப்பு.. சல்யூட்..!
நாளை ஒருநாள் ஊட்டியில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
ஊட்டி: குன்னூரில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் நாளை ஊட்டியில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது..!
குன்னூரில் நடந்த கோர விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்து வருகிறது.. நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய காட்டுப்பகுதியில் இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
மரத்தில் மோதியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது... சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் 11 பேருமே உயிரிழந்தனர்... உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் முக ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்.
ராணுவ வீரர்களின் உடல்கள் 13 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நாளை உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன.... இந்த விபத்து சம்பவ அதிர்ச்சியில் இருந்து நீலகிரி மக்கள் இன்னமும் மீளவில்லை..
குன்னூரில் இருந்து நஞ்சப்ப சத்திரம் 5 கி.மீ தூரம்தான் உள்ளது.. அதேபோல ஊட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.. வனப்பகுதிக்கு உள்ளே செல்வதால், மக்களால் இயல்பாக வாகனங்களில் செல்ல முடியாத நிலைமை உள்ளது. வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் அருகிலேயே இருப்பதால், ராணுவத்தின் முக்கியத்துவத்தை நீலகிரி மக்கள் இயல்பாகவே உணர்ந்து வைத்துள்ளனர்.. அடிக்கடி ஹெலிகாப்டர்கள் இங்கு வந்து செல்வதும் வழக்கம்..
நேற்றைய தினம் விபத்தில் இருந்து ஊட்டி மக்கள் மீளவே இல்லை.. பெரிதும் வேதனையில் தவித்து வருகின்றனர்.. எனவே ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை முழு கடையடைப்பை கடைப்பிடிக்கவுள்ளனர்... நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் உட்பட அனைத்து வகையான கடைகளையும் அடைக்க ஊட்டி மக்கள் முடிவு செய்துள்ளார்கள்... எனவே நாளை ஒருநாள் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications