பாஜகவின் கேம் ஸ்டார்ட்- திமுக ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் பயங்கரமான மாஸ் காட்டிய அண்ணாமலை மீட்டிங்!
நீலகிரி: பாஜகவின் கொள்கை எதிரிகளில் முதன்மையானவரான திமுக எம்.பி. ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூட்டிய கூட்டம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
ஆ.ராசா.. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்.. திராவிடர் பேரியக்க கொள்கைகளின் போர் முரசாக ஒலிப்பவர். எந்தவிதமான விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் தாம் சொல்ல வந்ததை ஆணித்தரமாக, ஆதாரங்களுடன் அடுக்குகிறவர் ஆ.ராசா.
ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டில் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் தனி ஒருவராக அந்த வழக்கில் தாமே வாதாடி வென்று சிறை மீண்டவர்; அதனால் கருணாநிதியால் தகத்தகாய சூரியன் என போற்றப்பட்டவர். திமுகவின் இன்றைய 2-ம் நிலைத் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர்.
மலேசியா தேர்தல்: தொங்கு நாடாளுமன்றம்- முதல் முறையாக கூட்டணி அரசு! மாஜி பிரதமர் மகாதீர் ஷாக் தோல்வி!
ஆ.ராசாவை லோக்சபா தேர்தலில் வீழ்த்தியாக வேண்டியது பாஜகவின் கனவு. பாஜகவின் ஒவ்வொரு இந்துத்துவா அசைவையும் எக்ஸ்போஸ் செய்கிற சிம்மசொப்பனமாக இருக்கிறவர் ஆ.ராசா என்பதால் அவரது தோல்வியை பாஜக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை ஆ.ராசாவும் நன்கு உணர்ந்தே நீலகிரி தொகுதியில் தமது இருப்பை தக்க வைப்பதில் முனைப்பு காட்டுகிறார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அண்மையில் ஒரு வெள்ளோட்டமாக பிரம்மாண்டமான வரவேற்பு ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டது.
டேன் டீ விவகாரம்
இப்போது டேன் டீ விவகாரம் திமுகவுக்கும் ஆ.ராசாவுக்கும் மிகப் பெரிய குடைச்சலாக பிரளயத்தைத் தரக் கூடியதாக உருவெடுத்து நிற்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமானது டேன் டீ தேயிலை தோட்டம். இதில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமே டேன் டீ தோட்டம்தான். இப்போது டேன் டீ வசமுள்ள தேயிலை தோட்ட நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கிறது தமிழக அரசு. இதனால் பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
அதிமுக கொந்தளிப்பு
இதனை இப்போது அதிமுக, பாஜக கையில் எடுத்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி வெளியிட்ட அறிக்கையில், கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம், நீலகிரி கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொழிலாளர்களின் குடும்பங்களில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் சுமார் 2500 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், தற்போது வசிக்கும் இடத்தை காலி செய்து ஒப்படைத்தால்தான் பணிக்கொடை வழங்கப்படும் என தொழிலாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி இருந்தார்.
பாஜக அண்ணாமலை கூட்டம்
இப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். நீலகிரியின் கூடலூரில் இன்று டேன் டீ விவகாரத்தில் பாஜக பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் பாஜகவினருக்கே இன்ப அதிர்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது.
திமுகவுக்கு சிக்கல்
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை வீழ்த்த பாஜக இலவு காத்த கிளியாக உள்ளது. இப்போது டேன் டீ விவகாரம் பாஜகவிடம் திமுகவே வலிய பந்து கொடுத்த கதையாகிவிட்டது. திமுகவுக்கு டேன் டீ விவகாரம் மிகப் பெரிய வீழ்ச்சியை தரக் கூடும் என்பதையே அண்ணாமலையின் மாஸ் கூட்டம் காட்டுகிறது என்கின்றனர்.