“புலிகள் பயம் இல்லாமல் வாழ்கிறோம்” - பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
நீலகிரி: உதகை மலைப் பகுதி கோடை சுற்றுலாவுக்கு மட்டும் உகந்த இடமில்லை. அது வனவிலங்குகளுக்கும் தாயகம். இங்குதான் முதுமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.

அதற்குள்ளாகக் காலங்காலமாகப் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், வனச் சட்டங்கள் வந்தபிறகு இவர்களின் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தங்களது தேவைகளை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை அம்மக்கள் முன்வைக்கிறார்கள். மின்வசதி, சாலைவசதி முறையாக இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இப்போது திமுக ஆட்சியில் அவர்களுக்கான மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு அவர்களுக்கு முதன்முறையாக மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதைப்பற்றிய பதிவுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கக் கூடிய மலைப்பகுதியாக இந்த நீலகிரி இருந்து வருகிறது. அதிலும் கூட, இங்குள்ள கூடலூர் பகுதி என்பது கடைக்கோடியில் உள்ளது.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஊருக்கு அருகிலேயேதான் முதுமலை புலிகள் காப்பகம் வருகிறது. இந்த வனத்தை உள் மண்டலப் பகுதி மற்றும் வெளி மண்டலப் பகுதி என அரசு இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது. இங்கே பழங்குடி மக்கள் உட்பட ஏறக்குறைய 600 குடும்பங்கள் வாழ்ந்துவந்தனர்.

நம் நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இவர்களுக்கு மின்வசதி கிடையாது. இவர்களின் பிள்ளைகள் கல்விகற்க வேண்டும் என்றால் இந்த வனத்தைக் கடந்துதான் வெகுதூரம் செல்லவேண்டும்.

இடையில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் வேறு. முறையான பாதை வசதிகள் இல்லாததால், அடர்ந்த வனப்பகுதிகளின் இடையே உள்ள குறுக்குவழிகளைத்தான் பிள்ளைகள் பயன்படுத்தியாக வேண்டும். அதனால் ஆபத்துகள் அதிகம்.

எனவே தங்களை மாற்று இடங்கள் வழங்கி, அங்கே வசிக்க ஏற்பாடு செய்துதருமாறு கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அவரது கவனத்திற்கு இக்கோரிக்கை கொண்டுசெல்லப்பட்டது. அதற்கான மனுவைப் பெற்ற ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இது குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் வட்டாட்சியர், "முதுமலை மாற்றுக் குடியிருப்பு திட்டத்தின் கீழ் இங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பு 2010 ஆண்டு முடிக்கப்பட்டது. இங்கே மூன்று விதமான பழங்குடி இனங்களைச் சேர்த்து 658 குடும்பங்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
இத்தனைக் குடும்பங்களும் காலங்காலமாகக் காட்டுக்குள்ளாகவேதான் வாழ்ந்துவருகிறார்கள். சுமார் 8 கி.மீட்டர் வரைப் பயணித்தால்தான் ஊர்ப் பகுதிக்கு வரமுடியும்.
ஆகவே ஸ்ரீமதுரை போன்ற பகுதிகளுக்கு தங்களின் குடியிருப்பை மாற்றி அமைக்கும்படி கேட்டுவந்தனர்.
அதன்படி இந்த 658 குடும்பங்களையும் மூன்று பகுதியாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லிக்கரை, முதுகுளி, தாகம்பளி எனப் பல பகுதி மக்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளன.
அதை ஆவணமாக ஏற்று இப்போது மின்வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம்" என்கிறார்.
மேலும் இம்மாவட்டத்தின் ஆட்சியர் அம்ரித், "பல காலமாக இங்குள்ள கிராமங்களுக்கு மின்வசதி இல்லை என்று எளிமையாகச் சொல்லமுடியாது. சுதந்திரம் பெற்றதிலிருந்து மின்சாரம் இல்லை.
குறிப்பாக சேம்புக்கரை, அணில் காடு, குரங்குமேடு போன்ற அனைத்து கிராமங்களும் பழங்குடி மக்கள் வாழும் பகுதி. இதுவரை இந்த மக்கள் மின்சாரம் என்றால் என்ன என்றே பார்த்ததேயில்லை.
அந்தக் கிராம மக்களுக்குத்தான் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் மின் இணைப்புக் கிடைத்துள்ளது.
இந்த மலைப்பாதைகளில் மின்கம்பங்கள் அமைப்பது என்பது சவாலான பணி. ஏதோ ஊர்ப் பகுதிகளுக்கு மின்சார இணைப்பு தருவதைப் போன்று எளிமையானதல்ல. காடு, மலைகளைக் கடந்து மின் கம்பங்களைக் கொண்டு சென்றுள்ளோம்.
இந்த மின்சார வசதி வந்த பிறகுதான் போர் போட்டு மோட்டார் வசதி மூலம் குடிநீர் இணைப்பு அந்த மக்களுக்குக் கிடைத்துள்ளது. இது மாபெரும் மாற்றம்" என்கிறார்
புதியதாக மாற்று இடங்கள் கிடைத்து, அதற்கான பட்டாவும் கிடைத்ததால் பல மக்கள் நல்ல பாதுகாப்பான வீடுகளைக் கட்டியுள்ளனர். யானை, கரடி போன்ற வனவிலங்குகளிடம் இருந்து நிரந்தரமான ஒரு பாதுகாப்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறது ஒரு பழங்குடி குடும்பம். மேலும் இடமாற்றி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்கிறது.
அதேபோல சுரேஷ் குமார் என்பவர், "இங்க வந்த பிறகுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சியே வந்துள்ளது. அங்கு இருக்கும் போது யானை பிரச்சினை. அதைவிட மிக முக்கியமாகப் புலிகள் பிரச்சினை. நிம்மதியாகவே இருக்க முடியாது" என்கிறார்.
அதேபோல் ரித்தீஷ் என்பவர் பேசும்போது "எங்களுக்கு 3 செண்ட் வீட்டுமனைப் பட்டா கொடுத்துள்ளார்கள். அதன்பிறகுதான் வீட்டுக்கு மின்சாரமே வந்துள்ளது" என்கிறார்.
இது பற்றி சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், "முதுமலைக் காப்பக பகுதிகளிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறுவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. ஏனென்றால், அந்த வனப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவினால் பயிர்செய்து வாழமுடியாமல் அம்மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.
அதன்பின்னர் தான் அவர்களே விரும்பி வெளியேறலாம் என அரசு ஒரு திட்டத்தை முன்வைத்தது. அதன்படி பல குடும்பங்களுக்கு இன்று மாற்று இடங்கள் வழங்கப்பட்டு பட்டாவும் கிடைத்துள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications